Thursday, February 26, 2009

தேடல் -9

யாரும் ஒரு எதிர்ப்பும் காட்ட இடமில்லாது போயிற்று. கூரான ஈட்டிகளையும் கத்திகளையும் பார்த்தவர்கள் கலங்கி போயிருந்தனர். நித்தி மட்டுமே இன்னும் கனவுலகில் இருந்தான். ஏதோ தனக்குத்தானே பேசிக்கொள்வதும் தலை ஆட்டுவதும்.... காட்டுவாசிகள் அவன் கைகளை கட்டிப்போட்டபோது எதிர்ப்பே தெரிவிக்கவில்லை. சிலர் இவர்களது உடமைகளை அபகரித்துக்கொண்டு மறைந்தனர்.

அன்று காலை இவர்கள் போன வேகமும் வழியும் யாராலும் போக முடியாதது என்று தோன்றியது. நடந்தால் விட்டார்கள். நடக்க முடியாதவர்களை தர தர என்று இழுத்துப் போனார்கள். உண்மையாக நடக்க முடியாத இடங்களில் அலாக்காக தூக்கிவிட்டார்கள். பெண்களை மரியாதையாக நடத்துவது போலவே தோன்றியது. அந்த மட்டும் நல்லது என்று சங்கர் நினைத்தார்.

எங்கேயும் சற்றும் தாமதிக்காமல் விரைந்ததில் வெகு தூரம் கடந்து விட்டதாக தோன்றியது. எங்கே போகிறோம்? ஏன் நம்மை ஒன்றும் செய்யவில்லை? அவர்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு விட்டு இருக்கலாமே? இந்த காட்டில் நாம் என்ன செய்ய முடியும்? ஏன் நம்மை சாகடிக்கவில்லை? ஏன் இவ்வளவு மெனக்கெட்டு எங்கோ அழைத்து போகிறார்கள்? கேள்விகள்..கேள்விகள்... பதில்தான் ஒன்றும் தட்டுப்படவில்லை. ஒரு வேளை மனிதர்களை சாப்பிடுவார்களோ? முதுகுதண்டில் ´சில்´ என்று ஏதோ ஏறியது போல இருந்தது.

இந்த மஞ்சு என்ன ஆனாள்? காட்டுவாசிகள் வந்த போது திடீரென்று பக்கத்தில் காட்டுக்குள் புகுந்து மாயமாகிவிட்டது போல காணாமல் போனாள். அவர்கள் கவனிக்கவில்லை போலும். பின்னால் வருகிறாளா? மஞ்சுவால் கூட இவ்வளவு வேக நடை முடியுமோ என்று தோன்றியது. உன்னிப்பாக கேட்டும் யாரும் பின்னால் வரும் சத்தம் ஏதும் துளிக்கூட கேட்கவில்லை.

மதியம் ஏதோ சுட்ட கிழங்குகளை கொடுத்தார்கள். சாப்பிட மறுத்த குமரன் எதிரில் ஒரு கூரான ஈட்டி நீட்டப்பட்டது. “சாப்பிடுங்களேன் குமரன் " என்றாள் வனிதா. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தாழ்ந்த குரலில் “தப்பிக்க வேண்டுமானால் உடம்பில சக்தி வேணும் இல்லையா?” என்றாள்.
அதன் பின் குமரன் சாப்பிட ஆரம்பித்தார்.

சாப்பாடு முடிந்து எல்லாருக்கும் ஏதோ ஒரு தண்ணீர் போன்ற கலவை தரப்பட்டது. கொஞ்சம் வாசனை பிரச்சினையாக இருந்தாலும் தாகத்தில் அனைவரும் குடித்துவிட்டனர். பொழுது சாய்வதற்குள் ஒரு திறந்த புல்வெளியை அடைந்தனர். அங்கே சில வெட்டிய மரங்கள், ஓலைகளால் கட்டிய குடிசைகள் இருந்தன. ஒரு குடிசைக்குள் சங்கர் உட்பட நான்கு பேரை போட்டு தள்ளினார்கள்.

யாருக்கும் நிற்க கூட தெம்பு இல்லை. விழுந்த அடுத்த சில நிமிடங்களில் தூங்கிப்போனார்கள்.

7 comments:

Kavinaya said...

மஞ்சுவை பிடிக்கும்னு சொன்னோன்ன காணாம ஆக்கிட்டீங்களே :(

மெளலி (மதுரையம்பதி) said...

திடுக்..திடுக் திருப்பங்கள்....சூப்பர்...கலக்குறீங்க :-)

திவாண்ணா said...

//மஞ்சுவை பிடிக்கும்னு சொன்னோன்ன காணாம ஆக்கிட்டீங்களே :(//

இதுக்குத்தான் எது மேலேயும் ரொம்ப அன்பு வைக்ககூடாது என்கிறது! ;-)

திவாண்ணா said...

மௌலி தாங்க்ஸ். மௌலிய வேற மாதிரி பின்னூட்டம் போட வெச்சதுக்கு கவி நயாவுக்கும் தாங்க்ஸ்!

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌலிய வேற மாதிரி பின்னூட்டம் போட வெச்சதுக்கு கவி நயாவுக்கும் தாங்க்ஸ்!//

ஆஹா!!!இதென்ன கூத்து?... :-)

குமரன் (Kumaran) said...

கதை பாயும் புலி போல பாய்ஞ்சு போய்கிட்டு இருக்கு. :-)

திவாண்ணா said...

//ஆஹா!!!இதென்ன கூத்து?... :-)//

பிறை சூடிய பெம்மானின் கூத்து!

//கதை பாயும் புலி போல பாய்ஞ்சு போய்கிட்டு இருக்கு. :-)//

:-))))))))))
இப்படி வேகமான நடையிலே எழுதனும்னுதான் உத்தேசிச்சேன். சிலர் மெதுவா இன்னும் விவரத்தோட போகணும்ன்னு கருத்து சொல்கிறாங்க. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...எல்லாம் கடேசில பாக்கலாம்.