Tuesday, February 24, 2009

தேடல்-7

அடுத்த நாள் காலை எழுந்த குழுவினர் சுறு சுறுப்பாக கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். ஏதோ வயிற்றுக்குப் போட்டுவிட்டு ஆயத்தமாகிக் கொண்டு இருந்தனர். நேற்று மாலை தடங்கல் ஏற்படும் போல இருந்தது. ஆனால் நல்ல காலம் மலைவாசிகள் இரண்டு பேர் அந்தப்பக்கம் வர மஞ்சு அவர்களிடம் ஏதோ பேசி சரி செய்துவிட்டாள். குமரன் அவர்களுக்கு கொடுத்த பணமும் கொஞ்சம் வேலை செய்து இருக்க வேண்டும். ஆமாம், அந்த பணத்தை வைத்து இந்த காட்டில் என்ன வாங்க முடியும்? சிரிப்பு அடக்க முடியவில்லை நித்தியானந்தத்துக்கு. எப்போதேனும் கீழே கிராமத்துக்கு போகும் போது பயன்படலாம்.

மீண்டும் நடை. நேற்று போல நடக்க முடியவில்லை யாருக்கும். இப்போது மலை உயரத்தில் ஏறுவது நன்றாக தெரிந்தது. மூச்சு விட சற்று சிரமமாக இருந்தது. பாதையும் கடினமாக இருந்தது. சரிவும் அதிகம். ஏற ஏற மேடு முடிவில்லாது தோன்றியது. செருப்புகள் எப்போதோ அறுந்து போய் விட்டு விடப்பட்டன. வெறும் காலுடன் நடந்து பழக்கமில்லாதவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். காற்றும் குளிர்ந்து வீசியது. சாதாரணமாக இது சுகமாக இருக்கும். இப்போதோ உள்ளே வேர்த்துக்கொட்ட மேலே மட்டும் சில்லிப்பு கஷ்டமாகவே இருந்தது. வியர்வை இவ்வளவு சில்லென்று இருக்குமா என்ன? ஏதோ இயந்திரத்தனமாக நடந்து கொண்டிருந்தனர். ஒரு கால் முன்னே... அடுத்து இன்னொரு கால்... அடுத்து .....

யாரும் எதிர்பாராத சமயத்தில் அந்த தாக்குதல் நடந்தது. ஒத்தையடிப்பாதையில் அவர்கள் போய்க் கொண்டு இருந்தபோது திடீரென்று ஒரு உறுமல் கேட்டது. யாரும் நிதானிக்கும் முன் ஒரு புலி தோன்றி அடிகளாரை கவ்விக்கொண்டு புதரில் மறைந்தது. நித்தியானந்தம் தவிர எல்லாரும் உறைந்து நின்றார்கள். "விடு, விடு, விட்டு விடு, என்ன செய்கிறேன் பார்" என்று கூச்சலிட்டான் நித்தியானந்தம். "குருவே! குருவே!" என்று கதறிய படி புலி சென்ற திசையில் புதரில் விழுந்து ஓடி மறைந்தான்.

யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆண்கள் புதர் வரை ஓடிச்சென்று தயங்கி நின்றார்கள். அடுத்து கிடு கிடு பள்ளம். புதர்கள். பெரிய பாறாங்கற்கள். இதில் ஒரு ஆளை தூக்கிக்கொண்டு புலி எப்படி ஓடியது? சிஷ்யனும்தான் எப்படி ஓடினான்? "சாமியோவ்! இதுல உங்களால ஏதும் ஆவாது. கொஞ்சம் இங்கியே நில்லுங்க. நான் போய் பாத்து வரேன்" என்ற படி மஞ்சு புதரைத் தாண்டி பாறையில் குதித்தாள்.

அனைவருக்கும் ஏற்பட்ட அதிர்ச்சியில் புலி மீண்டும் வருமோ என்ற கவலை கூட எழவில்லை. விஞ்ஞானிகள் "இவ்வளவு நாட்களாக இங்கேயெல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறோம், புலியின் தடத்தை பார்த்ததுக்கூட இல்லையே" என்று பேசிகொண்டனர். ஆனால் மலையின் இந்த பகுதிக்கு வந்திருக்கிறீர்களா என்ன என்று கதிர்வேலர் கேட்ட போது இல்லை என்று ஒத்துக்கொண்டனர்.
அனைவரும் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்க பதினைந்து நிமிடம் கழிந்தது. பின்னர் ஏதோ அரவம் கேட்டது. இப்போதுதான் வேறு மிருகம் வருகிறதோ என்று பயம் வந்தது. சற்றைக்கெல்லாம் நித்தியும் மஞ்சுவும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

என்ன ஆச்சு என்று தலைக்குத்தலை கேள்விகள் எழுந்தன. நித்தி பதில் சொல்லும் நிலையிலேயே இல்லை. கண்களில் கண்ணீர் வழிய வழிய வாய் ஏதேதோ முணமுணத்துக்கொண்டு இருந்தது. மஞ்சுதான் பேசினாள். “சாமி நாங்க ரொம்ப தொலவு போக முடியல. அங்கே பெரிய சரிவு. யாருமே - எந்த புலியுமே போக முடியாத அளவு. என்ன தேடியும் ஒரு குறியும் காணோம். சாமிய புலி எங்க தூக்கிப்போச்சோ தெரில.” "புலியெல்லாம் இங்க இருக்குன்னு சொன்னியா என்ன?” என்று குமரன் பாய சங்கர் "புலி இருப்பதாகத்தான் சொன்னாள். நாங்கள்தான் சும்மா பயமுறுத்துகிறாள் என்று நினைத்தோம்" என்று சமாதானப்படுத்தினார். அடுத்து என்ன செய்வது என்று கேள்வி எழுந்தது. தலைக்குத்தலை ஏதேதோ சொன்னார்கள். முடிவில் பொழுது சாயும் நேரம் வந்து விட்டதால் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போய் விடுவதென்றும் பின் காலை பார்த்துக்கொள்ளலாம் என்றும் முடிவானது. அப்படியே சற்று வேகமாக நடந்து அரை மணியில் ஒரு திறந்த வெளிக்கு வந்தனர். நெருப்பு மூட்டப்பட்டது. அதன் அருகில் சாப்பாட்டைப் பற்றிய சிந்தனை கூட இல்லாமல் அனைவரும் படுத்தனர்.

மஞ்சு மட்டும்தான் கதிர்வேலனார் மனைவிக்கு பாதங்களை வென்னீர் ஊற்றி கழுவி ஏதோ கிழங்கைப்போட்டு தேய்த்துக்கொண்டு இருந்தாள். செருப்பு இல்லாது போய் பாதங்கள் புண்ணாகி இருந்தன. அப்படியே ஏதோ இலைகளை மெல்லும்படி கொடுத்தாள். கதிர்வேலனார் எழுந்து பையில் இருந்து சாப்பிடக்கொடுத்தார்.

பெரும் புலியின் தாக்குதலில் இருந்து தப்பித்தவர்கள் இப்போது காவலுக்கு யார் என்ற யோசனை கூட இல்லாமல் தூங்கிப்போயினர்.

1 comment:

Kavinaya said...

புலிக்குகைன்னா புலி இல்லாமயா? :)