Sunday, June 28, 2009

32 உம் கதையும்....

ஒரு இரும்பு கடை திறக்கலாம்ன்னு உத்தேசம். அவ்வளோ ஆணி!
மௌலிகிட்டே நேரம் இல்லைன்னு ஜகா வாங்கிடலாம்ன்னு பாத்தா சூரி சார் வேற கூப்டார்.
சரி கொஞ்சம் கதை விடலாமேன்னு... ரொம்ப நாளாச்சு இல்லே?
--------------------
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்கள் பெயர் பிடிக்குமா?

ம்ம்ம்ம். அம்மா வழி தாத்தா பேர். வெச்சுட்டாங்க. என் பேரு எனக்கு ரொம்பவே பிடிக்குமே? ஆனா எந்த பேரை கேக்கறீங்க? பாருங்க முழு பேர் சொன்னா இணைய நண்பர்கள் பலருக்கு யாருன்னே தெரியறதில்லை. திவா ன்னு சொல்ல வேண்டி இருக்கு. ஆ.பா ன்னு இன்னொரு பேர். எனக்கு பிடிச்சது. இருந்தாலும் அதயும் யாரும் கூப்பிடறதில்லை. தொ.கி ன்னு இன்னொரு பேர். ஹிஹிஹி... அதுவும் பிடிக்கும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பத்தாவது படிக்கும் போது பசி வந்து வேலையா இருந்த அம்மாவை தொணப்பி அடி வாங்கினபோது.

3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
ஓ! சில சமயம் நானே கூட படிக்க முடியும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?
புதினா/ பருப்பு துவையல். உருளை/ பீன்ஸ் கறி, டொமாடோ ரசம், சுட்ட அப்பளாம். அவ்வளோதான். எதேஷ்டம்.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை. எல்லாரோடயும் சகஜமா பழகறேன். "எதிரி" உட்பட. நட்பு எங்கிட்டே வெச்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். 55 வருஷமா ஒத்தரோட வாழ்ந்துகிட்டு இருக்கேன். அவரையே சரியா புரியலை. அப்புறம் எப்படி உடனே நட்பு? அது தானா வரும் நாளடைவிலே.

6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

ரெண்டும் இல்லை. நெரூர் காவிரியிலே முங்கி முங்கி குளிச்ச பிறகு மத்ததெல்லாம் நெருலா ஐஸ்க்ரீம் சாப்ட ஆசாமிக்கு மத்தது எப்படி ருசிக்காதோ அப்படி ஆயிடுத்து.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்ணாடி போட்டு இருக்கிறேனான்னு!
ஹிஹி சும்மா சொன்னேன். குரலைதான் கவனிப்பேன்.

8. உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடித்த விஷயம்: கொஞ்சம் கொஞ்சம் இருக்கிற நேர்மை.
பிடிக்காத விஷயம் : அப்பப்ப வரும் கோபம் .

9. உங்க சரிபாதிகிட்ட உங்களுக்குப் பிடித்த பிடிக்காத விஷயம் எது?
//அவர் ப்ளாக்கர் இல்லை, நான் இடும் இடுகைகளையும் படிப்பவரல்ல. ஆகவே இங்கு இல்லாத ஒருவரைப் பற்றி இங்கு எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.//
மௌலிகிட்டேந்து சுட்டாச்சு. நன்னி மௌலி!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்கிறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருமில்லை. தனிமையே எனக்கு பிடிச்சது.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஹிஹிஹி...எப்பவுமே முக்காலே மூணு வீச நேரம் வெள்ளை பஞ்ச கச்ச வேஷ்டியும், வெள்ளை உத்தரீயமும்தான். இப்பவும் அதே!

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்கீங்க?
மானிட்டரை பாக்கிறேன். மேலே பான் சுத்தற சத்தம் கேக்கரேன்.
(யாரப்பா இந்த கேள்விய முதல்லே கேட்டது? எழுதரவங்க மானிட்டரை பாக்காமலே எழுதராங்கன்னு நினைப்பா? அவ்வளோ அசிரத்தையா? :-))))))


13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வண்ணமாக உங்களுக்கு ஆசை?

ஏம்பா? போயும் போயும் ஒரு பேனாவா மாத்தணுமா? வேறே தோணலையா? சரி போகட்டும். டர்காய்ஸ் நீலம்.

14. பிடித்த மணம்?
சந்தனம். அப்புறம் இப்ப சமீபத்திலே எல்லாம் குட்டி பாப்பாவுக்குன்னு ஒரு தனி மணம் இருக்கே அது!


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


யாரையும் அழைக்கலை. கவலைப்படாதீங்க!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

மௌலி: கர்ம சிரத்தை குறித்து சமீப காலமா பதிந்து வருவது.
சூரி சாரின் ஆன்மீகம்.

17. பிடித்த விளையாட்டு:

சுடோகுதான் இப்ப.
காலேஜ் படிச்சப்ப விளையாடாத கேம் இல்லை. ஆனாலும் பாஸ்கெட் பால்தான் பிடிக்கும். கிரிகெட்டிலே டீமில் இருந்தாலும், கிரௌண்டுக்கு போனோமா அரை மணி ஒரு மணி விளையாடி வேர்க்க விருவிருக்க வந்தோமான்னு பாஸ்கெட் பால்தான் பிடிக்கும்!

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம், ஆனால் அவசியமில்லாமலே பேப்பர் படிக்கலாம். தொலை தூரம் பாக்கலாம்.... கணினித்திரைக்கு மட்டுமே அவசியமா வேண்டி இருக்கு.

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

சினிமா பாக்க போறோமா? கொஞ்சம் நேரமாவது சிரிச்சுட்டு வரணும்- பாமா விஜயம், சர்வர் சுந்தரம் போல. ஆனா சினிமா எல்லாம் பாத்து ரொம்பவே வருஷங்கள் ஆச்சு.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ஹரிதாஸ் ன்னு கேள்வி பட்டு இருக்கீங்களா? இல்லை? அடடா! நானும் பாக்கலை. :-)) ஜாக்கி சானின் ட்ரங்கன் மாஸ்டர்.... என்னமா வளையறாரு! ரொம்பவே வியக்க வெச்ச படம்.

21. பிடித்த பருவகாலம் எது?

ம்ம்ம்ம். மழைக்காலம்தான். மழை பிசு பிசுன்னு வெளியே பெய்ய, லீவு நாளிலே ஒரு ஈஸிசேர், கையிலே ஒரு நல்ல புத்தகம், பக்கத்திலே வறுத்த கடலை அல்லது பக்கோடா.... அடடா!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கைவல்லிய நவநீதம். பல நாட்களா அதைத்தான் திருப்பி திருப்பி...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு தரம் செட் பண்ணா அவ்வளொதான். வழக்கமா அதை ஒரு சில நொடிக்கு மேலே பாக்கிறதில்லையே! ஏன் இதை விதவிதமா செட் பண்ணறாங்கன்னு புரியலை.

24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : ப்ரணவம். அதை கேக்கறப்போ இருக்கிற நிம்மதி எப்பவௌம் இராது.
பிடிக்காதது : பயணம் போனாலே பேஜார்தான். வண்டிகளோட சத்தம்...

25.
வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

புது தில்லி. பிலானி போயிருக்கேன். அதுக்கு அதிகமா பயணம் பண்ணாலும் தூரம் கம்மின்னு நினைக்கிறேன்.

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஜாக் ஆப் ஆல் ட்ரேட்ஸ்! மாஸ்டர் ஆப்? ஹிஹிஹி

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பொய்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ம்ம்ம்ம்.. காலை முதல் அலாரம் 3-50 க்கு அடிச்சபின் இன்னும் போகட்டும் அடுத்த அலாரத்துக்கு எழுந்துக்கலாம்ன்னு சொல்கிறதே அதான்.

29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தலம்?

குன்னூர் ரொம்பவே பிடிச்சது. ஊட்டி மாதிரி ஜனங்க அதிகம் இல்லாம... ஆனா நாளாச்சு..இப்ப மாறி இருக்கும்.

30. எப்படி இருக்கணும்ன்னு ஆசை?

தயக்கமே இல்லாத பதில் ... இருக்கணூம்ன்னா ஜீவன் முக்தனா இருக்கணும்.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

ஒரேன்னு போட்டா என்ன அர்த்தம்? மத்ததெல்லாம் அவங்களொட சேர்ந்துதான் செய்யறோம்ன்னா? (அப்புறம் முதல் 3 வார்த்தையை ஒண்ணா படிச்ச விபரீதமா இருக்கே!) அனேகமா எல்லா லௌகீக காரியங்களும் அவங்க இல்லாமதான் செய்யறேன்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க.
என் மெய்லே இருக்கிற வாசகம். சந்தோஷமா இருங்க. வாழ்கை என்கிறது ரொம்ப குறைந்த காலம்தான்.
Be happy! Life is too short to be unhappy!