Wednesday, February 25, 2009

தேடல்-8

வழக்கம்போல் சங்கர் அதிகாலை எழுந்துவிட்டான். இரவு சாப்பிடாமல் தூங்கியது சோர்வாக இருந்தாலும் இன்று ஏதோ நடக்கப்போகிறது என்று தோன்றியது. சிரித்துக்கொண்டான். ¨நேற்று என்னவெல்லாம் நடக்கவில்லை? இன்று ஏதோ நடக்கப்போகிறதா? அடிகள் என்ன ஆகியிருப்பார்? அப்படி தடம் ஒன்றும் இல்லாமல் எப்படி புலி தூக்கிச்சென்றது? இதை அப்படியே விடமுடியாதே? ஒரு வழியாக திரும்பிப்போனதும்- போவோமா?- போலீஸில் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன செய்வார்கள்? வனத்துறை அனுமதி இல்லாமல் எப்படி அங்கே போனீர்கள் என்று குடைவார்கள். குமரனும் வனிதாவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வந்ததாக சொல்லிக்கொள்ளலாம். ஒத்துக்கொள்வார்களா?¨ அர்த்தமில்லாமல் ஏதேதோ கேள்விகள்.

மஞ்சு ஏற்றி நெருப்பைத் தூண்டி ஒரு பாத்திரத்தில் வென்னீர் கொதிக்க வைப்பது தெரிந்தது. தானும் மௌனமாக அவள் அருகில் போய் அமர்ந்தான். "தூங்கினையா சாமி? ரொம்ப நாளாச்சில்ல?” என்று திரும்பிக்கூட பார்க்காமல் கேட்டாள் அவள். தலையை ஆட்டினான். ¨ஓ! தான் தலை ஆட்டுவது தெரியாதே, குனிந்து அல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறாள்¨ என நினைத்தான். "தூங்கினேன்.” கீச் கீச் என்று பறவைகள் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். அருகில் மரத்தின் கூட்டில் சில பறவைகள் கும்மாளமிட்டன. தாய் ஏதோ உணவு சம்பாதித்து வந்திருக்க வேண்டும். த ஏர்லி பேர்ட்.. என்று நினைவோடியது. "பாத்தியா சாமி. அதெல்லாம் நம்ம மாதிரி கவல படுரதில்ல. இப்ப திங்க கிடச்சுதா, சரி. இல்லையா கிடைக்கிர இடத்த தேடிப் போய்ரும். சாமி நமக்கு வேண்டியத கொடுக்கும் அப்படி நம்புதுங்க. சிரித்தாள். நம்பிக்க இல்லாதது நாமதான?”
"பறவைக்கெல்லாம் சாமி பத்தி தெரியுமா" கேட்டான் சங்கர்.
“தெரியாதுன்னு எப்படி தெரியும் சாமி?“ எதிர்கேள்வி கேட்டாள்.
என்ன கேள்வி இது என்று வியந்த சங்கரை குமரன் அழைத்து கவனத்தை கலைத்தார். “சங்கர் இன்றைய ஆக்ஷன் ப்ளான் முடிவு பண்ணனும்.

இப்போதுதான் எல்லாரும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தார்கள். திரும்பிவிடலாம் என்று குமரன், வனிதா சொல்ல கதிர்வேலன் தம்பதியினர் என்ன ஆனாலும் தொடர்ந்து மேலே போகலாம் என்று வாதித்தனர். நித்தி பேசவே இல்லை. "குரு போன வருத்தம் போல் இருக்கிறது. நாம்தான் இப்போது முடிவு செய்ய வேண்டும்" என்று நினைத்துக்கொண்டான் சங்கர். என்ன செய்யலாம்? இவ்வளவு தூரம் வந்தது வீணாக போய் விடுமா? என்ன செய்ய வேண்டுமானாலும் இந்த மஞ்சுவின் உதவிதானே வேண்டும். யாரும் அவளை கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே? நாம் என்ன சொன்னாலும் அவள் கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்று நினைக்கிறார்களோ?

"இதப்பாருங்க வனத்துறை அனுமதி இல்லாம நாம இங்க வந்ததே தப்பு. அதனால திரும்பிப்போய் நாம நடந்ததை போலீஸ்ல சொல்லனும். அதுதான் சரி. எங்களுக்கு இங்கெலாம் சுத்த அனுமதி இருந்தாலும் நாம இப்ப இருக்கற பகுதிக்கு அனுமதி உண்டான்னு தெரியல. எங்க இருக்கோம்னே சரியா தெரியலையே?திரும்பி போறதுதான் சரி.”

“மஞ்சு என்ன சொல்றே?” என்றான் சங்கர்.
"சாமிங்க நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி சாமி" என்றாள் சுருக்கமாக.
"மேலே தொடர்ந்து போகலாம்" என்றான் சங்கர். குமரன் சட்டென்று எழுந்தார். "நீங்க வேண்ணா போங்க. நாங்க திரும்பறோம்.” அதெப்படி மஞ்சு வழி காட்டாம போயிடுவீங்களா?" அக்கரையோடு வினவினார் கதிர்வேலன். “எப்படியாவது போறோம். கோபத்துடன் குமரன் தன் பையை எடுத்தார். "வனிதா நீ ஏன் கிளம்பலை?”
"அதுக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன், குமரன்" என்று தன் எதிரே சுட்டிக்காட்டினாள் வனிதா.

அங்கே பத்து காட்டுவாசிகள் வந்துக்கொண்டிருந்தனர். மஞ்சு பக்கம் திரும்பினான் சங்கர். அவன் மனதில் இருந்த கேள்விக்கு விடை கொடுத்தாள் மஞ்சு.
“அவங்க எங்க ஆளுங்க இல்லை சாமி.”

2 comments:

Kavinaya said...

மஞ்சுதான் எனக்கு பிடிச்ச கதாபாத்திரம் :)

திவாண்ணா said...

:-)))))))))
எனக்கும்தான்!