Thursday, March 12, 2009

தேடல் -19

¨ஆமாம். இவ்வளவு நாட்களும் உங்களுடன் வந்து கொண்டு இருந்தவர்தான். அடிகளாரை தூக்கியும் போனவர்தான். உம் ஆகட்டும்.¨ மஞ்சு திரும்பி நடந்து குகையின் ஒளிக்குள் மறைந்தார்.

வாலை ஆட்டிக்கொண்டு வழிகாட்டின நாயை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே அனைவரும் பின் தொடர்ந்தனர்.
முன்னம் அவர்கள் பிரிந்த இடத்துக்கு வரவும் குமரனும் வனிதாவும் நிரம்பிய தோள் பைகளுடன் விவாதித்து கொண்டே வரவும் சரியாக இருந்தது. ¨போகலாமா!¨ என்ற கேட்டு விட்டு மீண்டும் அவர்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது கீழே இறங்குவதாக இருந்ததாலும் மனம் நிறைவாக இருந்ததாலும் எல்லாரும் விரைவாகவே இறங்கத்தொடங்கினர். மஞ்சுவை காணாததைக்கூட குமரனோ வனிதாவோ கவனிக்கவில்லை.

நான்கு நாட்களில் உலகமே எப்படி மாறிப்போய்விட்டது? முன்பு இதை பார்த்தாலே வெறுப்பு மேலோங்கியது. இப்போதோ எதைப்பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரு கம்ஃபாஷன்தான் வருகிறது. முதலில் அம்மாவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ள தயார்ன்னு சொல்லணும். எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! ஓ! நான் இந்தியா வந்து இருகிறதே கூட அவங்களுக்கு தெரியாதே. திடீரென்று எதிரே போய் நிற்கலாமா? வேண்டாம். அப்பாவுக்கு கொஞ்சம் பிபி. ஏதாவது ஆகிவிடக்கூடும்.

முன் எப்போதும் இல்லாத நிம்மதியை இப்போது உணர்ந்தான் சங்கர்.

அடிகளார் மனம் நிச்சலனமாக இருந்தாலும் ஆதர்ச சிஷ்யனை பிரிந்துவிட்டோமே என்ற ஆதங்கம் கொஞ்சம் தலைத்தூக்கத்தான் செய்தது. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டாரே குரு! குரு? ஆமாம். நித்தியிடம் சொன்னபோது நம்மை அறியாமலே சத்தியமான வார்த்தைகள் வந்து விழுந்தன. பிரியும் போது கூட நித்தி அழவே இல்லையே! எவ்வளவு வைராக்கியம் வந்துவிட்டது! தன் மேல் வைத்த மதிப்பை அப்படியே சித்தரிடம் திருப்பி விட்டுவிட்டான். எப்போ வருவானோ? எப்போது நான் பொறுப்பில் இருந்து விடுபடுவேனோ! ம்ம்ம்ம்ம்... அட, நம் மடத்துக்கு ரொம்ப மதிப்பு வைத்து இருக்கும் மதுரை ஆடிட்டரை மறந்து போனோமே! சில மாதங்கள் முன் வந்து ஏதோ பேச முற்பட்டபோது கூட, நேரம் சரியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். முதலில் அவரை கூப்பிடச்சொல்லி பேச வேண்டும்...சிந்தனை தொடர்ந்தது.

வள்ளி ஒரு வழியா நம்ம முருகன் வழி காட்டிட்டான் பாத்தியா!
ஆமாங்க. முதல்ல கீழே இறங்கினதும் அவனுக்கு ஒரு அபிசேகம் செஞ்சுட்டு போகலாம்.
அடுத்து எந்த டாக்டரை..
யாரையும் பாக்க வேணாங்க. மஞ்சு எனக்கு அப்பப்ப ஏதோ பச்சிலை எல்லாம் கொடுத்து வந்தா. எனக்கும் ஏனோ சாப்பிடணும்னு தோணிச்சு. ஆயாசம் நீங்கத்தான் கொடுக்கிறா ன்னு நினைச்சேன். அது வேறன்னு இப்ப தோணுது. உடம்பே இப்ப வித்தியாசமா இருக்கு. லேசா....கனமே இல்லாம... என் தம்பியை சொத்துக்கு ஆசை படறான்னு நினைச்சு வீணா விலக்கி வெச்சு இருந்தோமே அது தப்புன்னு தோணுது. கூப்பிட்டு பேசணும்.

எல்லோருக்கும் இப்போது ஏதோ நினைவு மங்கியது. புதிய எண்ணங்கள் வந்தன. புதிய கண்ணோட்டங்கள்...

ஆகா இப்படி ஒரு அழகான முருகன் கோவில் இந்த மலையில்! நாள் போனதே தெரியவில்லையே! யாரையும் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் ஒரு நிம்மதி வந்துவிட்டதே! தம் காரியம் இனி நன்றாக நடக்கும் என்று ஒரு நம்பிக்கையும் வந்துவிட்டது.

குமரனும் வனிதாவும் இன்னும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தோள் பை நிறைய பலவித தாவரங்கள். பூக்கள், இலைகள்.. .. எது புதுசு? எது பழசு.? இதில் கருத்து வேறுபாடு நிறையவே இருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களைப்பற்றி ஒரு நினைவே கூட இல்லாமல்.....

சுமார் இரண்டு மணி நேரத்தில் கீழே இறங்கிவிட்டார்கள். மேலே போகும்போது நான்கு நாட்கள் ஆயிற்றே! இப்போது இரண்டு மணி நேரம்தானா என்ற எண்ணம் சங்கர் மனதில் மட்டும் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

ஒரு டவேரா வந்து நின்றது. ¨அக்கா! அக்கா!¨ என்று உரக்க கூவியபடி ஒருவர் இறங்கி ஓடி வந்தார். ¨பத்து நாளா எங்கே போய்விட்டீங்க? நாங்க படாத பாடு பட்டுட்டோம். அக்கம் பக்கம் தேடாத இடமில்லை.¨
¨பத்து நாளா?¨
¨பின்ன, உங்க ட்ரைவர் காரை ரிப்பேர் பாத்து திரும்பி வந்து பத்து நாள் ஆகப்போகுது. இங்கே பக்கத்திலே ஒரு கிராமத்திலே இருப்பீங்கன்னு சொல்லி போனீகளாம். அங்க கேட்டா யாருக்கும் தெரியலே! என்ன செய்யிறதுன்னு தெரியாம எங்கிட்ட வந்தான். நானும் ரெண்டு நாள் பொறுத்து பாத்திட்டு வண்டில இங்கேயே சுத்தி சுத்தி வரென். சொல்லிட்டு போக்கூடாதா? சரி வாங்க போலாம்.¨
¨இவங்களையும் பக்கத்து ஊரிலே விட்டுடலாம்பா. நாங்கள்லாம் ஒண்ணா இந்த மலையிலே ஒரு முருகன் கோவிலுக்கு போய் வந்தோம்.¨
¨பக்கத்து ஊர் என்ன? எங்கே போகணுமோ அங்கேயே விட்டுடலாம். உங்களை திரும்ப பாத்ததுல இப்ப எவ்வளொ நிம்மதியா இருக்கு.¨

அனைவரும் வண்டியில் ஏறினர்.

மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் சிரிப்பது போல இருந்தது. அது நம் பிரமையாகதான் இருக்க வேண்டும். நாய் எங்காவது சிரிக்குமா என்ன? அது புலியாக மட்டும்தான் மாறும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிறைவுற்றது!

Wednesday, March 11, 2009

தேடல்-18

¨இவள் யார்? உங்கள் வழி காட்டிதான்! வேறு யாரும் இல்லை.¨ என்ற குரல் கேட்டது.
மஞ்சு கம்பீரமாக எழுந்து நின்று முதன் முறையாக குழுவினரை நேருக்கு நேர் பார்த்தாள்.

சக்தி வாய்ந்த கண்கள் ! ஏன் இவ்வளவு நாட்கள் யாரையும் நேரே பார்க்கவில்லை என்பது புரிந்தது. பார்த்திருந்தால் அவற்றின் சக்தி இது சாதாரண பெண் இல்லை என்று அடையாளம் காட்டி இருக்கும்!

இப்போது குரல் அவளது வாயிலிருந்தே வருகிறது என்பது புரிந்தது.

¨ஐந்து நாட்களாக உங்களுடனேயே இருக்கிறேனே! மௌனியை தவிர யாரும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தால் அவரை அங்கேயே நிறுத்தி தேவையானதை செய்துவிட்டு வந்தேன். அவருக்கு உபதேசம் ஆகிவிட்டது. சமாதிக்கு போய்விட்டார்! சில காலம் சென்ற பின் இந்த மலையில் உலவும் பல சித்தர்களில் அவரும் ஒருவராகிவிடுவார். நித்திக்கு கொஞ்சம் புரிந்தது. கொஞ்சம் சிரமப்பட்டே அவன் கவனத்தை திருப்ப வேண்டி இருந்தது.¨

யாருக்கும் ஒரு பேச்சும் எழவில்லை. இவ்வளவு சக்தி வாய்ந்த சித்தர் நம்மிடையே ஒருவராக பழகி உலாவிக்கொண்டு இருந்தாரா? பிரமிப்பே ஏற்பட்டது. அனவரும் தரையில் வீழ்ந்து வணங்கினர்.

¨திருப்பி இங்கே...¨
¨திருப்பி இங்கே நீங்கள் வர முடியாது. இந்த இடம் கொஞ்சம் வித்தியாசமானது. உலகின் சாதாரண விதிகள் இங்கு செல்லுபடியாகாது. நீங்கள் திரும்பி இங்கே வருவது தேவையானால் அதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த இடம் இன்னும் கொஞ்ச நேரத்திலேயே வித்தியாசமாக ஆகிவிடும். திருப்பி இங்கே வந்தால் கூட உங்களால் கண்டு பிடிக்க முடியாது. அதைப்பற்றி கவலை வேண்டாம். உங்களுக்கு தேவையானது சரியான சமயத்தில் யார் மூலமாகவோ வந்து சேரும். இந்த மலையின் அடிவாரத்துக்கு போவதற்குள்ளேயே இங்கே நடந்த பல விஷயங்கள் உங்களுக்கு மறந்துவிடும். தேவையானது மட்டுமே நினைவில் இருக்கும்.¨

¨ஏன் அப்படி?¨
மஞ்சு சிரித்தார். அப்புறம் ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் கூட இங்கே வரத்தோன்றும். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்கத்தோன்றும். கவலைப்படாதீர்கள் தேவையான நேரத்தில் ஏதோ ஒரு நபர், விஷயத்தின் மூலம் உங்களுக்கு எப்போதும் வழி காட்டப்பட்டுவிடும்.¨

¨ நித்தியானந்தம், இங்கேயே கொஞ்சம் நேரம் இரு. சிலர் வந்து உன்னை அழைத்து போவார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்கும்! போய் வாருங்கள். நிறைவான வாழ்க்கை வாழுங்கள்! நேரம் ஆகிவிட்டது. குமரனும் வனிதாவும் வந்து விடுவார்கள். சீக்கிரம் போங்கள்!¨

¨அவர்களுக்கு... ¨என்று இழுத்த சங்கரை இடைமறித்தார் மஞ்சு. ¨அவர்களுக்கு அவர்கள் தேடி வந்தது கிடைத்துவிட்டது. யார் யார் எதை தேடுகிறார்களோ அதுதானே கிடைக்கும்? அவர்களால் ஒன்றும் பிரச்சினை வராது. இதோ இந்த நாயை தொடர்ந்து போங்கள். சீக்கிரமே கீழே போய்விடலாம்.¨

நாய்?

இப்போது அவர்கள் கண் எதிரே புலி முன்னம் அவர்களுடன் வந்து கொண்டு இருந்த நாயாக மாறியது.

திகைப்புக்கு மேல் திகைப்பு!

Tuesday, March 10, 2009

தேடல் -17

¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨

¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!
¨ஏன்?¨
¨என் குருவை விட்டு பிரிந்து இருக்க மாட்டேன்.¨

நிறைவான சிரிப்பொலி கேட்டது.

¨இனி உனக்கும் உன் குருவுக்கும் கூட இப்போது பேசுவது கேட்கும். அந்த மடத்தைப்பற்றிதான் உனக்கு தெரியுமே? மிகவும் பெயர் பெற்றது. நான் சொன்னபடி செய்தால் அந்த மடத்து பொறுப்பு உனக்கு வந்து சேரும். நிறைய பொருளும் கிடைக்கும், ஊரார் உன்னை மதித்து கொண்டாடுவார்கள். இந்த நாட்டிலேயே, ஏன் உலகிலேயே சிறந்த ஆன்மீகவாதி என்ற பெயர் கிடைக்கும். நான் சொல்கிறபடி செய்யாது போனால் இத்தனையும் இழப்பாய்!¨

¨என்ன வேண்டுமானாலும் இழந்துவிட்டு போகிறேன். என் குருவை விட்டு போக மாட்டேன்.¨

¨நித்தியானந்தம்! உன்னைப்போல குரு பக்தி கொண்டவரை பார்ப்பது அரிது. உனக்கு என்று சில வேலைகள் காத்து இருக்கின்றன. நாட்டில் மக்கள் அரசியல் மீது நம்பிக்கையை வேகமாக இழந்து வருகிறார்கள். அராஜகம் பெருகிவிட்டது. இனி ஆன்மீகம் ஒன்றே அவர்களுக்கு நம்பிக்கையை தரும். அப்போதுதான் அவர்களால் முழு சக்தியுடன் வேலை செய்து விளங்க முடியும். இந்த மறு மலர்ச்சி உன்னால்தான் நிகழ வேண்டும் என்பது இறைவன் சித்தம். அதற்கு மறுப்பு சொல்லாதே.¨

¨மாட்டேன்!!¨ என்றான் நித்தி உறுதியாக.

¨நித்தி அடியேன் சொல்கிறேன். இவர் நம் குரு பரம்பரையில் மிகவும் மூத்தவர். அதனால் இவர் சொல்வதை தட்டக்கூடாது.¨
¨குருவே உங்களைத்தவிர எனக்கு யாரையும் தெரியாது.¨
¨அப்படியானால் நான் சொல்வதை கேட்பாயல்லவா? நான் உத்திரவு போடுகிறேன். இவர் சொல்வது போல இனி நடந்து கொள்ள வேண்டும். என்ன யோசிக்கிறாய்? இனி இவர் என்ன சொன்னாலும் அதை நான் சொல்வதாகவே நினைக்க வேண்டும்.!¨

ஒரு நிமிட மௌனத்துக்குப்பின் ¨குருவே அப்படியானால் சரி. உங்கள் ஆணையை மீற மாட்டேன்!¨ என்றான் நித்தி.

¨ஆகட்டும். நேரம் ஆகிவிட்டது. நீங்கள் கிளம்பலாம்.¨

¨ஐயா எங்களுக்கு வழி காட்டி உதவிய இந்த பெண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்!¨ என்றான் சங்கர்.

கலகல என்ற சிரிப்பொலி கேட்டது

Monday, March 9, 2009

தேடல் - 16

¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.

¨ஐயா! எனக்கு புத்தி வந்துவிட்டது. மக்களை மிகவும் இனம் பிரித்துக்கொண்டு இருந்தேன். ஜனங்களை இனம் பிரிப்பது அவரவர் வேலையை ஒழுங்காக செய்ய மட்டுமே என்று புரியாமல் இருந்தேன். அதனால் ஒரு அகந்தை இருந்தது. சாதாரண எளிய ஜனங்கள் மீது அதனால் ஒரு அலட்சியம் இருந்தது. இவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்தேன். காட்டுவாசிகள் எனக்கு வைத்தியம் பார்த்த பின்னரே இவர்களுக்கு நிறையவே தெரியும். எல்லாத்துக்கும் மேலே அன்பு காட்ட தெரியும் என்று புரிந்து கொண்டேன். என்னை எல்லா பொறுப்பிலிருந்தும் விடுவித்து தவம் செய்ய விடுங்கள்!¨ என்றார்.

¨சச்சிதானந்தம்! குரு சொன்னதை அப்போதே நிறைவேற்றி இருந்தால் இந்த தொல்லை உமக்கு வந்து இருக்காது. போகிறது. உங்கள் பிரச்சினை புரிகிறது. ஆனால் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுக்க வேண்டு. காலம் கனிய வேண்டும்.¨

¨எத்தனை சமூக தொண்டுகள் செய்கிறேன்? எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் குருவே? ¨

¨சமூக தொண்டு செய்ய எத்தனையோ நிறுவனங்கள். அவற்றுக்கு உதவி செய்யலாம். ஆன்மீகத்தை கவனிக்கத்தான் ஆளில்லை. அதை செய்யுங்கள். அதுதானே உங்கள் வேலை? மக்களுக்கு சேவை செய்கிறேன் பேர்வழி என்று ஏதாவது கொடுக்க கொடுக்க மக்கள் அதை வாங்கிக்கொண்டு மேலும் மேலும் எதிர்பார்த்துக்கொண்டுதான் இருப்பர். அவர்களை சோம்பேறிகள் ஆக்க வேண்டாம். அவர்களுக்கு இறை உணர்வுடன் உழைக்க கற்றுக்கொடுங்கள். உழைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள். பெற்றதை பகிர்ந்து கொள்ள சொல்லிக்கொடுங்கள். பண்பை சொல்லிக்கொடுங்கள்!¨

¨எதற்காக மடங்கள் இருக்கின்றன? ஆன்மீகத்தை கட்டிக்காக்கத்தானே! மக்களை நல்வழி படுத்தத்தானே! இந்த முக்கிமான காரியத்துக்கு உதவத்தான் அத்தனை சொத்தை இறைவன் கொடுத்தான். செலவுக்கு கவலை படாமல் ஆன்மீக தொண்டு செய்வதற்கு செல்வந்தர்கள், மன்னர்கள் நிலபுலன்கள் கொடுத்தார்கள். எப்போது அந்த நோக்கத்தில் இருந்து விலகி போயிற்றோ அப்போது மடங்களும் தார்மீக சக்தியை இழக்கும். அடிகளே , மடங்கள் செய்ய வேண்டிய காரியங்களை நடத்தாவிட்டால் அந்த சொத்துக்களும் கைவிட்டு போகும். பிரச்சினைகள்தான் அதிகமாகும் ஆன்மீகம் காணாமல் போய் சொத்தை நிர்வாகம் செய்வதிலேயே நேரம் போனால் எப்படி?

¨ இறைவன் மீதும் குருவின் மீதும் நம்பிக்கை வைக்காமல் நீதி மன்றங்கள் மீதும் ஆட்சியாளர் மீதும் ஏன் நம்பிக்கை வைக்கிறீர்கள்?
மட நிர்வாகத்தின் நுணுக்கங்களை அதற்காக இருக்கிற நபர்களிடம் விட்டுவிடுங்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை சூழ்ந்த பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப்போகும். பொருளைப்பற்றி கவலைப்படாமல் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தேவையான பொருளை இறைவன் தானே அனுப்புவான். மக்களை நல்ல வழிக்கு திருப்ப என்ன செய்யலாம் என்று யோசனை செய்ய வழி தானே தெரிய வரும். மக்களிடம் அன்பு காட்டி முன்னுதாரணமாக இருங்கள்.¨

¨ நித்தியானந்தம் இங்கேயே இருக்கட்டும். அவனுக்கு பயிற்சி கொடுக்கப்படும். அவன் வந்து சேர்ந்தபின் அவனுக்கு பட்டம் கட்டிவிட்டு அவனிடம் பொறுப்புக்களை கொடுத்துவிட்டு நீங்கள் ஒதுங்கி தவம் செய்யலாம். அது வரை அனைவரிடமும் அன்பு காட்டி நிர்வாகம் செய்து வாருங்கள்!¨

¨ஆகட்டும் ஐயா!¨

¨நித்தியானந்தம். நீ இங்கேயே இருக்க வேண்டியது. உனக்கு சில பயிற்சிகள் சொல்லித்தரப்படும்.¨

¨முடியாது ஐயா!¨ என்றான் நித்தி!

Friday, March 6, 2009

தேடல்-15

¨கதிர்வேலரே, வள்ளியம்மையே! உங்க ரெண்டு பேருக்கும் நான் பேசறது கேக்கும். ஆன்மீகத்தில கணவன் மனைவியை தனித்தனியா பாக்கிறதில்லை. தம்பதியாதான் பாப்போம்! கதிர்வேலரே பணம் சம்பாதிப்பது எப்படி முக்கியமோ அதே போல அதை செலவிட கத்துக்கறதும் முக்கியம். பொருளை தேடு தேடுன்னு தேடினீங்க. சேத்ததை எப்படி செலவழிச்சீங்க?¨

¨உண்மைதான் சாமி, யாருக்கும் எதுவும் பெரிசா பண்ணலை.¨

¨அதனால்தான் அது ஆஸ்பத்திரிகளுக்கு போச்சு! தேவையா இது? உங்க குலத்தாலதான் பல தான தர்மங்கள் நடைபெற்று இருக்கு. பல கோவில்கள் கும்பாபிஷேகம் ஆகியிருக்கு. பல வேத ஆகம பாடசாலைகள் நடந்து இருக்கு. அதை நினைவில் வைக்கணும். தொடர்ந்து அந்த காரியத்தை செய்யணும்.¨

¨ஆகட்டும் சாமி!¨

¨ குடும்ப சண்டையால பிரிஞ்சாலும் குல தெய்வ வழிபாட்டை விடலாமா? அதை சரி பண்ணுங்க.¨

¨ஆகட்டும் சாமி! ஆனா குல தெய்வம் எதுன்னே எங்க தாத்தா காலத்துலேந்தே தெரியாம போயிடுத்தே!¨

¨வேற எது? கடைசியா வந்து சேந்தீங்களே, அதே முருகன் கோவில்தான்! ¨

¨முருகா!¨

¨உங்க முன் ஜன்ம புண்ணியம்தான் கடைசியா உங்க குல தெய்வத்துகிட்டேயே கொண்டுவந்து விட்டது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. நீங்கள் இருவரும் முன் ஜன்மங்களில செஞ்சதுக்கு தகுந்தபடி அனுபவிச்சீங்க. கஷ்டம் வேண்டியது அனுபவிச்சாச்சு. இனி சந்தோஷமா வீட்டுக்கு திரும்புங்க. வருஷம் ஒரு தரம் குல தெய்வத்தை போய் பாத்து ஆராதனை எல்லாம் செய்யணும். அதான், நீங்க கடைசியா போன கோவில் முருகனுக்கு அபிஷேக ஆராதனை பண்ணி அன்னதானம் செய்யுங்க. அக்கம் பக்க கிராமம் எல்லாத்துக்கும் செய்தி போகணும். ஒரு ஆயிரத்து எட்டு பேராவது சாப்பிடணும். சரியா? உங்க மனைவிக்கு தேவையான மருந்து எல்லாம் போன நாலு நாள்ளே கொடுத்தாச்சு.¨

¨நன்றி சாமி!¨ என்று கீழே விழுந்தனர் தம்பதியர்.

¨எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் சுத்தி சுத்தி வராங்களே. ரொம்ப தொந்திரவா இருக்கு.¨

¨வாரிசு இல்லைன்னுதான் சுத்தி வந்தாங்க. உங்களுக்கு கெடுதல் பண்ண நிறைய முயற்சி செய்தாங்க. அதுல கொஞ்சம் பலனும் அவங்களுக்கு கிடச்சது. ¨

¨அவங்களுக்கு அதால கெட்டதும் எதுவும் ஏற்பட வேண்டாம் சாமி.¨

¨ஆஹா! இதைதான் எதிர்பார்த்தேன். நல்ல மனசு உங்க ரெண்டு பேருக்கும். அதுதான் உங்களை காப்பாத்தி வருது. எல்லாருமே அவங்க அவங்க செய்கிற காரியத்துக்கு அனுபவிச்சே தீரணும். இதில நீங்க செய்யக்கூடியது ஒண்ணும் இல்லை. ¨

¨நீங்க யாரையும் வெறுக்காம தேவையான அளவு மட்டும் கொஞ்சம் அவங்களுக்கு உதவி செய்யலாம்.¨

--
¨அடிகளே!¨ என்று ஆரம்பிக்கும்போதே அடிகளார் கீழே விழுந்தார்.

Thursday, March 5, 2009

தேடல்-14

¨வாருங்கள் குழந்தைகளே!¨

எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.


¨பயப்பட வேண்டாம். புலி உங்களை ஒன்றும் செய்யாது. நீங்கள் தேடி வந்த இடத்தை இப்போது அடைந்து விட்டீர்கள். இனி மேல் உங்களுடன் பேசுவது மற்றவர்களுக்கு கேட்காது. யாருடன் பேசுகிறேனோ அவர்களுக்கு மட்டுமே கேட்கும். நீங்கள் பேசுவதும் அப்படியே. எனக்கு மட்டுமே கேட்கும். கவலைப்படாமல் பேசலாம். ¨


பிறகு ஒவ்வொருவருடனும் ஒரே நேரத்தில் பேச்சு வார்த்தை நடந்தது.


¨ குருவே எனக்கு எனக்கு சன்யாசம் கொடுங்கள்.¨

¨ஏன்?¨

¨வாழ்கையே பிடிக்காமல் போய்விட்டது. ஓடி ஓடி சம்பாதித்து அலுத்துவிட்டது. சம்பாதித்து, குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று .... என்கிற வாழ்கை பிடிக்கவேயில்லை. . ஆத்மாவை தேடுவதிலேயே நேரத்தை கடத்துகிறேன்.¨

¨சன்னியாசம் பெற்றுக்கொண்டால் உடனே ஆத்மா பிடிபட்டு விடுமா?¨

¨..........¨

¨இது உலகின் மீது உள்ள வெறுப்பு. பற்றற்று இருப்பதும் வெறுப்புடன் இருப்பதும் ஒன்று இல்லை. பிரம்மத்தைப்பற்றி கொஞ்சம் படித்து வைத்து இருக்கிறாய் அல்லவா?¨

¨ஆம்!¨

¨சுருக்கமாக எல்லாமே பிரம்மம் இல்லையா?¨

¨ஆமாம்¨

¨அப்போது பிரம்மத்தை வெறுக்கிறாயா?¨

¨.......¨

¨இல்லைதானே! இதோ பார் பற்றும் இருக்கக்கூடாது; வெறுப்பும் இருக்கக்கூடாது.¨

¨ சங்கர் உலக நியதியுடன் போயே ஆத்ம முன்னேற்றத்தை பார்க்கணும். இந்த கலி யுகத்துக்கு சன்யாசம் பொருந்தாது. சில மடங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் மிகவும் அரிதாக பிறவியில் வைராக்கியம் வந்தவர் தவிர மற்றவர்கள் குடும்பம் நடத்தத்தான் வேண்டும். இந்த கலியில் சரியாக சன்னியாசம் நடத்துவது துர்லபம். பிரச்சினைகள்தான் அதிகம். மனதில்தான் சன்னியாசம் முக்கியமாக வேண்டும். அதீத பற்றில்லாமல் குடும்பம் நடத்திக்கொண்டே எல்லாவற்றையும் செய்யலாம். உன் ஆத்ம முன்னேற்றம் இதனால் பாதிக்காது. மாறாக உறுதி படும். பொறு! ¨

¨எவ்வளவு நாள்? எவ்வளவு நாள் பொறுக்க வேண்டும்?¨

¨சங்கர், இன்னும் கொஞ்ச நாட்கள்தான் நீ பொறுக்க வேண்டும். உன்னால் நீ இப்போது இருக்கிற நாடுக்கு ஒரு பெரிய திருப்பம் ஏற்பட வேண்டி இருக்கிறது. அது நடந்ததும் நிறைய பொருள் தொடர்ந்து கிடைக்க வழி கிடைக்கும். அப்போது நாடு திரும்பு. நிறைய வேலைகள் உனக்காக இங்கே காத்துகொண்டு இருக்கு. நாட்டில் ஒரு ஆன்மீக மறு மலர்ச்சி ஏற்பட நீ ஒரு காரணமாக இருக்கப்போகிறாய்! அதற்கு பண பலமும் அவசியம். அதை சம்பாதித்துக்கொண்டு திரும்புவாய். தகுந்த நேரத்தில் உனக்கு தேவையான வழி காட்டுதல் கிடைக்கும்.¨

¨நல்லது குருவே. இப்போது எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்களே, என்ன பண்ணுவது? ¨


¨ செய்து கொள் சங்கர். அதை நீ மறுத்ததால்தான் உனக்கு மன உளைச்சல் வந்தது. உனக்காக பிறந்தவள் கல்யாணம் ஆகவில்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். இந்த இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. உன் பெற்றோரிடம் உன் சம்மதத்தை தெரியப்படுத்து. தானாக நடக்க வேண்டியது நடக்கும்.கிருஹஸ்த தர்மம் மிக உயர்ந்தது. அதை சரியாக கடை பிடிப்பவர்கள்தான் இல்லை. அப்படி நடந்தால் பல விஷயங்கள் மிகவும் சுலபமாக சரியாகிவிடும். ஆகவே திருமணம் செய்து கொண்டு முறைப்படி வாழ்ந்து பல விஷயங்களை சாதிப்பாயாக. உனக்கு வருபவள் இந்த விஷயங்களுக்கு அனுகூலமாகவே இருப்பாள்.¨

Wednesday, March 4, 2009

தேடல்-13

திடுதிப்பென்று வனிதா நின்றாள். பின்னாலேயே வந்த அடிகளார் மோதாமல் இருக்க மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.
¨மன்னிக்க வேண்டும்¨ என்று அவசரமாக குமரன் கூற அடிகள் சாந்தமாக ¨பரவாயில்லை!¨ என்றது அனைவரையும் வியப்பில் ஆழ்தியது.
¨என்ன வனிதா இப்படி?¨ என்ற குமரன் வனிதாவின் முகத்தை பார்த்து நிறுத்திக்கொண்டான். வனிதா பரபரப்புடன் பையை கீழே போட்டு உள்ளிருந்து தொலை நோக்கியை எடுத்தாள். கண்களில் அதை பொருத்திக்கொண்டு வலது பக்கம் இருந்த பள்ளத்தாக்கை ஆராய்ந்தாள். ¨குமரன், அதோ பாருங்க!¨ என்றபடி தொலை நோக்கியை அவரிடம் கொடுத்தாள்.
ஆராய்ந்த குமரனும் பரபரப்பானார்.
¨நான் நினைப்பதும் நீ நினைப்பதும் ஒன்றுதானா?¨
¨ஆமாம். அழிந்துவிட்டது என்று பலரும் சொல்லி வரும் செடி போலதான் இருக்கிறது. கிட்டே போய் பார்த்தால்தான் தெரியும்.¨
¨நேரம் ஆகிவிட்டது. இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் சில அரிய தாவரங்கள் இருக்கின்றன. நாங்கள் கொஞ்ச நேரத்தில் அங்கே போய் பார்த்துவிட்டு வருகிறோம். ¨

யாரும் பதில் சொல்லக்கூட நேரம் தராமல் இருவரும் பள்ளத்தில் இறங்கிவிட்டனர்.

மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இதென்ன ....
தாழ்ந்த குரலில் மஞ்சு சொன்னாள்... ¨ கிளம்புங்க போகலாம்.¨
¨எங்கே?¨ என்று குழப்பத்தில் கேட்டான் சங்கர்.
¨நாம தேடி வந்த புலிக் குகை அந்த திருப்பத்திலதான் இருக்கு!¨ என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் மஞ்சு.
திகைத்துப்போய் நின்றவர்கள் சுதாரித்துக்கொண்டு அவள் பின்னால் விரைந்தார்கள்.

மஞ்சுவை இப்போது விரட்டிப்பிடிக்க வேண்டியிருந்தது. பல காலம் பழகிய பாதையில் நடப்பதைப்போல தயக்கமில்லாமல் நடந்து சீக்கிரமே பாதையின் வளைவை திரும்பி விட்டாள். பின்னால் ஓட்டமும் நடையுமாக தொடர்ந்தவர்கள் வளைவு திரும்பியதும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஒரு குகையின் எதிரே சுமார் பதினைந்தடி தள்ளி மஞ்சு அமர்ந்திருக்க குகையின் வாசலை அடைத்தபடி முன்னே அடிகளாரை தூக்கிச்சென்ற புலி படுத்திருந்தது.

புலிக்கு எதிரே உட்கார்ந்து இருந்தாலும் மஞ்சு கொஞ்சம் கூட பயப்படுவது போல தெரியவில்லை. வந்தவர்கள் புலிக்குகையை தேடி வந்தாலும் புலியை எதிர்பார்த்து வரவில்லை. இப்போது யோசிக்கும் போது அது தர்க்க ரீதியாக மடத்தனமாக இருந்தது.

புலியின் பின்னே குகையின் வாசல் தெரிந்தது. சுமார் ஐந்து அடி உயரம், அகலம் இருந்தது. குகையின் உள்ளே எதிர்பார்க்கும் இருட்டுக்கு மாறாக செக்கச்செவேல் என்று ஒளி. ஆனால் கண்ணை கூசுவதாக இல்லை. இதமாகவே இருந்தது. அங்கங்கு பொன்னிற ஒளியும் சேர்ந்து பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. குகையின் பின்னால் பச்சைப்பசேல் என்று மரங்கள், புதர்கள். இனம் புரியாத நல்ல வாசனை ஒன்று அங்கே தவழ்ந்து கொண்டு இருந்தது.

¨வாருங்கள் குழந்தைகளே!¨

எல்லாருக்கும் இப்போது அதிசயமாக இருந்தது. ஒலி எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. ஆனால் மிகத்தெளிவாகவே கேட்டது.

Tuesday, March 3, 2009

தேடல் -12

¨ஆமாம்! ஏன் இப்படி என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தீர்கள்?¨ என்று கேட்டார் அடிகளார்.

¨பின்னே காட்டுவாசிகள் திரும்பி வந்தால்?¨ என்று பதில் கேள்வி எழுப்பினார் குமரன்.
¨ஒன்றும் ஆகி இராது¨ என்றார் அடிகள்.
நித்தி கருமமே கண்ணாக அடிகளாரின் உடம்பை ஆராய்ந்து கொண்டிருந்தான். பல இடங்களில் புலியின் பல் ஆழமாக போய் இருந்ததும் அதற்கு ஏதோ மூலிகை வைத்து கட்டி இருந்ததும் தெரிய வந்தது.
சங்கர் ஆராய்ந்து பார்த்ததில் காயம் ஆழமாக பலமாக இருந்தாலும் ஆரோக்கியமாகவே தோன்றியது ஆச்சரியமாக இருந்தது.
¨யார் இப்படி சிகித்சை செய்தது?¨
¨காட்டுவாசிகள்தான்.¨
¨என்னது?¨
¨ஆமாம் அவர்கள் நீங்கள் நினைப்பது போல பயங்கரமானவர்கள் இல்லை.¨
¨நடந்ததை சொல்ல வேண்டும்.¨
¨சுருக்கமாக சொல்கிறேன். புலி திடீரென தாக்கியதில் எனக்கு ஒண்ணும் புரியவில்லை. அது வெகு வேகமாக என்னை தாக்கி கவ்விக்கொண்டு விட்டது. கழுத்தில் தடிமனான துணி சுத்தி இருந்ததால் சாகவில்லை போல் இருக்கிறது. அது அதிக தூரம் ஒன்றும் என்னை இழுத்துப்போகவில்லை. கொஞ்ச தூரத்திலேயே ஒரு புதரின் பின்னால் கிடந்தேன். நித்தியும் மஞ்சுவும் எனக்கு வெகு அருகில்தான் போனார்கள். பலங்கொண்ட மட்டும் கத்தினேனே. காதில் விழவில்லை?¨
நித்தி திகைப்புடன் பார்த்தான்.
¨உங்களுக்கு பலங்கொண்ட மட்டும் என்பது அப்போது அதிகமாக இருந்திருக்காது¨ என்றார் குமரன்.
¨அப்புறம் காட்டுவாசிகள் வந்தார்கள். என்னை தூக்கிப்போனார்கள். நான் நினைவு இழந்துவிட்டேன். விழித்தபோது குடிசையில் இருந்தேன். காட்டுவாசிகள் மருந்திட்டு கட்டுபோட்டார்கள். அவர்களை எவ்வளவு தவறாக மதிப்பிட்டேன். சக சீவர்களிடம் அன்பு காட்டுவது என்னைப்போன்றவர்களுக்கு முக்கியம் என்று புரிய வைத்தார்கள். எவ்வளவு பேரை அனாவசியமாக கடிந்து கொண்டேன்? கோபப்பட்டேன்? என்னைப்போன்றவர் கடைபிடிக்க வேண்டியதெல்லாம் நேற்று படுத்துக்கிடந்த போது தெரிய வந்தது.¨
¨அப்போ காட்டுவாசிகளால் நமக்கு ஆபத்து இல்லை?¨
¨இல்லை என்றே நினைக்கிறேன்.¨
¨எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும்? நாம் போய் கொண்டே இருக்கலாம்.¨ என்றான் சங்கர்.
எங்கே போவது?
அடுத்த பத்து நிமிடங்களில் இருபது கருத்துக்கள் வெளியாகின.
கதிர்வேலன் காட்டுவாசிகளால் பிரச்சினை இல்லை என்று ஆகிவிட்டதால் தொடர்ந்து மேலே போகலாம் என்றார். மற்றவர் ஆபத்து நீங்கியதாக ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியில் கதிர்வேலன் தம்பதியரைத்தவிர மற்றவர் திரும்பி போக தீர்மானித்தனர். விரும்பினர் என தெரிந்தது.
சங்கர் வள்ளியம்மையுடன் ஏதோ பேசிக்கொணடு இருந்த மஞ்சுவை பார்த்து ¨என்ன மஞ்சு, எங்களை கிளம்பிய இடத்துக்கு கொண்டு சேர்த்து விடுகிறாயா?¨ என்றான்.
மஞ்சு வழக்கம் போல் தரையை பார்த்துக்கொண்டே ¨ஆகட்டும் சாமி!¨ என்றாள்.
அனைவரும் மூட்டைகளை தூக்கிக்கொண்டனர். வள்ளியம்மை கதிர்வேலரிடம் ஏதோ சொல்ல அவரும் பேசாமல் பைகளை தூக்கிக்கொண்டார்.
அடிகளால் நடக்க முடிகிறது என்று கண்டுகொண்ட பின் அனைவரும் தயங்காமல் நடக்கலாயினர்.

Monday, March 2, 2009

தேடல்-11

விடிந்துவிட்டதை உணர்ந்த போது சங்கருக்கு சற்று அலுப்பாகவே இருந்தது. ஏன் இப்படி கிறுக்குத்தனமாக மாட்டிக்கொண்டு விழிக்கிறோம்? நல்ல வேலை, நல்ல சம்பளம், - ஒரு கல்யாணத்தை செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக.......

உடனே தன்னால் அப்படி இருக்கவே முடியாது என்று தோன்றியது. உள்ளே ஏதோ ஒரு அமைதியின்மை. எதை செய்தால் இது தீரும்? புலிக்குகையை பற்றி கேட்ட போதே ஒரு ஈர்ப்பு இருந்தது. அட மாதக்கணக்கில் தூக்கமே வராமல் விழித்த நான் கடந்த சில நாட்களாக நன்றாக தூங்கி இருக்கிறேனே? அது எப்படி. ஒரே அலைச்சல், நடை அதுதான் என்ற நினைப்புடனேயே இல்லை இது வேறு ஏதோ என்றும் தோன்றியது. ச்சே! இந்த மாதிரி குழப்பங்கள்தான் என் அமைதி இன்மைக்கு காரணம் என்று முணு முணத்துக்கொண்டான் சங்கர். குமரன் என்ன செய்கிறான் என்று திரும்பிப்பார்த்தான். வெளியே எதோ வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தது தெரிந்தது. திடீரென்று பரபரப்பானான் குமரன். இங்கே பார் நம்பவே மாட்டாய் என்றான் திரும்பி.

எழுந்து போய் குமரன் பார்த்துக்கொண்டு இருந்த ஓட்டை வழியே வெளியே சங்கர் பார்க்க ஒன்றும் தெரியவில்லை. ஒன்றும் இல்லையே என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே குடிசையின் வெளியே சத்தம் கேட்டது. வாசலின் குறுக்கே இருந்த தடைகள் விலக்கப்படும் ஒலி கேட்க தொடர்ந்து "கதவு"ம் திறக்கப்பட்டது.
“நல்லா இருக்கீங்களா சாமி" என்று மஞ்சு கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள்!

இவளை பார்த்துதான் குமரன் கூப்பிட்டு இருக்க வேண்டும்.
எங்கே போயிருந்தாய் மஞ்சு?
அட எங்கே போவேன் சாமி? பின்னாலேயேதான் வந்துகிட்டு இருந்தேன். சரியான நேரம் பாத்து ஏதனாச்சும் செய்யலாம்ன்னு... திடீர்ன்னு பாத்தா காட்டுவாசிங்க கிளம்பிட்டாங்க. திரும்பி வாராங்களான்னு கொஞ்ச நேரம் பாத்துட்டு இதோ வரேன்....சீக்கிரம் கிளம்பிடுவோம். எங்கியாச்சும் திரும்பி வந்துட போறாங்க...
பரபரப்புடன் சொன்னாள்.

குமரனும் சங்கரும் அடுத்த குடிசைக்குள் போகும்முன்னேயே அதன் "கதவு" திறந்து வனிதா வெளிப்பட்டாள். மற்றவர்களும் வந்து சேர்ந்து கொள்ள அனைவரும் கிளம்பிவிட்டனர். அட இப்படிக்கூடவா ஒரு எதிர்பாராத அதிருஷ்டம்! நித்தி மட்டும் ஏனோ தயங்கி நிற்பதாக தோன்றியது. திடீரென்று குமரன் நாம மத்த குடிசைகளையும் பார்த்துவிடலாம். ஏதாவது சாப்பிட இருந்தால் எடுத்துக்கொள்ளலாம் என்றான். அட நல்ல யோசனைதான், நீங்கள் போய் கொண்டே இருங்கள் நாங்கள் விரைந்து தேடிவிட்டு வருகிறோம் என்றான் சங்கர். மற்றவர்கள் அந்த பகுதியை விட்டு வெளியே போவதற்குள்ளேயே ஆ என்று கூவினான் குமரன்.


மீதி இருந்த இரண்டு குடிசைகள் ஒன்றில் நுழைந்து அங்கே ஒன்றும் இல்லை என்று கண்டு கொண்ட சங்கர் குமரன் கூச்சலால் வெளியே வந்து அங்கே ஓடினான். உள்ளே நுழந்து இருந்த குமரன் யாரையோ கைத்தாங்கலாக அழைத்து வருவது தெரிந்தது. அது யார் என்று தெரிய வந்தபோது திகைத்துப்போனான் சங்கர்.

¨குருவே குருவே!¨ என்று நித்தி ஓடி வந்து வெளியே வந்தவர் காலில் போய் விழுந்தான். அப்போதுதான் அது அடிகளார் என்று புரிந்தது மற்றவர்களுக்கு.
வனிதா தாழ்ந்த குரலில் எல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாம். முதலில் அவரை அழத்துக்கொண்டு வாருங்கள் என்றாள்.
கும்பலாக அனைவரும் அடிகளாரை எப்படியோ தாங்கிக்கொண்டு ஓடினர். அடிகளார் ஏதோ சொல்ல முயல எல்லாம் அப்புறம் ஆகட்டும் என்று அடமடக்கினர். மஞ்சு முன் ஓடி வழி காட்ட மற்றவர் பின்னாலேயே விரைந்தனர். ஒரு இருபது நிமிடம் ஓடுவதற்குள் அனைவருக்கும் வியர்த்துவிட்டது. போதும். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று குமரன் சொல்ல அனைவரும் ஆங்காங்கே அமர்ந்தனர்.
¨ஆமாம்! ஏன் இப்படி என்னை இழுத்துக்கொண்டு ஓடி வந்தீர்கள்?¨ என்று கேட்டார் அடிகளார்.