வாலை ஆட்டிக்கொண்டு வழிகாட்டின நாயை ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே அனைவரும் பின் தொடர்ந்தனர்.
முன்னம் அவர்கள் பிரிந்த இடத்துக்கு வரவும் குமரனும் வனிதாவும் நிரம்பிய தோள் பைகளுடன் விவாதித்து கொண்டே வரவும் சரியாக இருந்தது. ¨போகலாமா!¨ என்ற கேட்டு விட்டு மீண்டும் அவர்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது கீழே இறங்குவதாக இருந்ததாலும் மனம் நிறைவாக இருந்ததாலும் எல்லாரும் விரைவாகவே இறங்கத்தொடங்கினர். மஞ்சுவை காணாததைக்கூட குமரனோ வனிதாவோ கவனிக்கவில்லை.
நான்கு நாட்களில் உலகமே எப்படி மாறிப்போய்விட்டது? முன்பு இதை பார்த்தாலே வெறுப்பு மேலோங்கியது. இப்போதோ எதைப்பார்த்தாலும் யாரை பார்த்தாலும் ஒரு கம்ஃபாஷன்தான் வருகிறது. முதலில் அம்மாவுக்கு போன் செய்து திருமணம் செய்து கொள்ள தயார்ன்னு சொல்லணும். எவ்வளவு சந்தோஷப்படுவாங்க! ஓ! நான் இந்தியா வந்து இருகிறதே கூட அவங்களுக்கு தெரியாதே. திடீரென்று எதிரே போய் நிற்கலாமா? வேண்டாம். அப்பாவுக்கு கொஞ்சம் பிபி. ஏதாவது ஆகிவிடக்கூடும்.
முன் எப்போதும் இல்லாத நிம்மதியை இப்போது உணர்ந்தான் சங்கர்.
அடிகளார் மனம் நிச்சலனமாக இருந்தாலும் ஆதர்ச சிஷ்யனை பிரிந்துவிட்டோமே என்ற ஆதங்கம் கொஞ்சம் தலைத்தூக்கத்தான் செய்தது. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டாரே குரு! குரு? ஆமாம். நித்தியிடம் சொன்னபோது நம்மை அறியாமலே சத்தியமான வார்த்தைகள் வந்து விழுந்தன. பிரியும் போது கூட நித்தி அழவே இல்லையே! எவ்வளவு வைராக்கியம் வந்துவிட்டது! தன் மேல் வைத்த மதிப்பை அப்படியே சித்தரிடம் திருப்பி விட்டுவிட்டான். எப்போ வருவானோ? எப்போது நான் பொறுப்பில் இருந்து விடுபடுவேனோ! ம்ம்ம்ம்ம்... அட, நம் மடத்துக்கு ரொம்ப மதிப்பு வைத்து இருக்கும் மதுரை ஆடிட்டரை மறந்து போனோமே! சில மாதங்கள் முன் வந்து ஏதோ பேச முற்பட்டபோது கூட, நேரம் சரியில்லாமல் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். முதலில் அவரை கூப்பிடச்சொல்லி பேச வேண்டும்...சிந்தனை தொடர்ந்தது.
வள்ளி ஒரு வழியா நம்ம முருகன் வழி காட்டிட்டான் பாத்தியா!
ஆமாங்க. முதல்ல கீழே இறங்கினதும் அவனுக்கு ஒரு அபிசேகம் செஞ்சுட்டு போகலாம்.
அடுத்து எந்த டாக்டரை..
யாரையும் பாக்க வேணாங்க. மஞ்சு எனக்கு அப்பப்ப ஏதோ பச்சிலை எல்லாம் கொடுத்து வந்தா. எனக்கும் ஏனோ சாப்பிடணும்னு தோணிச்சு. ஆயாசம் நீங்கத்தான் கொடுக்கிறா ன்னு நினைச்சேன். அது வேறன்னு இப்ப தோணுது. உடம்பே இப்ப வித்தியாசமா இருக்கு. லேசா....கனமே இல்லாம... என் தம்பியை சொத்துக்கு ஆசை படறான்னு நினைச்சு வீணா விலக்கி வெச்சு இருந்தோமே அது தப்புன்னு தோணுது. கூப்பிட்டு பேசணும்.
எல்லோருக்கும் இப்போது ஏதோ நினைவு மங்கியது. புதிய எண்ணங்கள் வந்தன. புதிய கண்ணோட்டங்கள்...
ஆகா இப்படி ஒரு அழகான முருகன் கோவில் இந்த மலையில்! நாள் போனதே தெரியவில்லையே! யாரையும் பார்க்கவில்லை, பேசவில்லை. ஆனால் ஒரு நிம்மதி வந்துவிட்டதே! தம் காரியம் இனி நன்றாக நடக்கும் என்று ஒரு நம்பிக்கையும் வந்துவிட்டது.
குமரனும் வனிதாவும் இன்னும் விவாதித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் தோள் பை நிறைய பலவித தாவரங்கள். பூக்கள், இலைகள்.. .. எது புதுசு? எது பழசு.? இதில் கருத்து வேறுபாடு நிறையவே இருந்தது. இடைவிடாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மற்றவர்களைப்பற்றி ஒரு நினைவே கூட இல்லாமல்.....
சுமார் இரண்டு மணி நேரத்தில் கீழே இறங்கிவிட்டார்கள். மேலே போகும்போது நான்கு நாட்கள் ஆயிற்றே! இப்போது இரண்டு மணி நேரம்தானா என்ற எண்ணம் சங்கர் மனதில் மட்டும் ஒரு கணம் தோன்றி மறைந்தது.
ஒரு டவேரா வந்து நின்றது. ¨அக்கா! அக்கா!¨ என்று உரக்க கூவியபடி ஒருவர் இறங்கி ஓடி வந்தார். ¨பத்து நாளா எங்கே போய்விட்டீங்க? நாங்க படாத பாடு பட்டுட்டோம். அக்கம் பக்கம் தேடாத இடமில்லை.¨
¨பத்து நாளா?¨
¨பின்ன, உங்க ட்ரைவர் காரை ரிப்பேர் பாத்து திரும்பி வந்து பத்து நாள் ஆகப்போகுது. இங்கே பக்கத்திலே ஒரு கிராமத்திலே இருப்பீங்கன்னு சொல்லி போனீகளாம். அங்க கேட்டா யாருக்கும் தெரியலே! என்ன செய்யிறதுன்னு தெரியாம எங்கிட்ட வந்தான். நானும் ரெண்டு நாள் பொறுத்து பாத்திட்டு வண்டில இங்கேயே சுத்தி சுத்தி வரென். சொல்லிட்டு போக்கூடாதா? சரி வாங்க போலாம்.¨
¨இவங்களையும் பக்கத்து ஊரிலே விட்டுடலாம்பா. நாங்கள்லாம் ஒண்ணா இந்த மலையிலே ஒரு முருகன் கோவிலுக்கு போய் வந்தோம்.¨
¨பக்கத்து ஊர் என்ன? எங்கே போகணுமோ அங்கேயே விட்டுடலாம். உங்களை திரும்ப பாத்ததுல இப்ப எவ்வளொ நிம்மதியா இருக்கு.¨
அனைவரும் வண்டியில் ஏறினர்.
மௌனமாக தூரத்தில் அமர்ந்து இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் சிரிப்பது போல இருந்தது. அது நம் பிரமையாகதான் இருக்க வேண்டும். நாய் எங்காவது சிரிக்குமா என்ன? அது புலியாக மட்டும்தான் மாறும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிறைவுற்றது!