Monday, February 23, 2009

தேடல் -6

      மதிய உணவு ஒரு அருவி அருகில் நடந்தது. எல்லாருக்கும் நல்ல பசி. அவரவர் கொண்டு வந்த பைகள் இப்போது கணிசமாகவே எடை குறைந்திருந்தன. எடை குறைய குறைய நல்லதுதானே? சுலபமாக நடக்கலாம் என்று நினைத்துக் கொண்டான் நித்தியானந்தம். உடல் எடை மட்டுமல்ல .... கர்மாவும்தான். பரம குரு சொன்னது ஞாபகம் வந்தது. ¨அழுக்கு தேயத் தேய ஆத்மா ஒளி விடும். அதில் முழுகப்பாரு. நம் கடன் இப்போது குருவுக்கு பணிவிடை செய்து கிடப்பதே. இவருக்கு கோபம் அதிகம் வருகிறது. பாவம் என்ன செய்வார். பரம குரு போனதில் இருந்து யாரும் இவரை மதிப்பதில்லை. இவர் குருவாக தகுதி இல்லை என்று நினைப்பு. இவரை தேர்ந்தெடுத்ததே பரம குருதானே? அவரிடம் பக்தி கொண்டவர்கள் இவரை யோசித்துதான் தேர்ந்தெடுத்து இருப்பார் என்று நம்ப வேண்டாமா? இதெல்லாம் ஆராயக்கூடாது. அபசாரம். அதோ குரு சற்று சிரமப்படுகிறார். போய் ஏதேனும் தரையில் விரிப்போம். கொஞ்சம் படுக்கட்டும். இந்த மஞ்சு....யார்? ஏன் இவளைச்சுற்றியே என் மனது வட்டமிடுகிறது? அப்படி காமம் ஒன்றும் இல்லையே.¨ "இல்லையா?” என்று அடிமனது கேட்டது.
"நித்தி...” குரு கூப்பிட்டதும் எழுந்து ஓடினான் நித்தியானந்தம்.

       மீண்டும் நடை, நடை. பழக்கமில்லாதவர்கள் சிரமப்பட்டார்கள். ஏதோ மிருகங்கள் பயன்படுத்தும் பாதைகள் போல அவ்வப்போது அறிகுறிகள் தெரிந்தன. எல்லையே இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பது போல இருந்தது. அண்மையில் உள்ள மரங்களைத்தவிர ஒன்றும் பார்க்க முடியாததால் திருப்பி திருப்பி ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வருவது போலவும் இருந்தது. இதோ இந்த புதரை பார்த்தால் போல இருக்கிறதே? அந்த யானை மாதிரியான கல். சீச்சீ. அது வேறு மாதிரி இருந்தது. ஆனால் மாலை வரும்போது மலையில் கணிசமாக ஏறிவிட்டதுபோல தோன்றியது. ஒரு திருப்பத்தில் திடீரென்று மரங்கள் விலகிவிட கீழே வெகு தூரத்தில் பசுமையான வயல்கள் தெரிந்தன. அருகில் ஒரு ஏரி. அவற்றின் மேலே வட்டமிடும் பருந்துகள். எல்லோருமே மெய் மறந்து சற்று நேரம் நின்றார்கள்.

சரி சரி கிளம்பலாம்" என்று சங்கர் குரல் கொடுக்க அவர்கள் மீண்டும் நடக்கலானார்கள்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒருவர் குறைவது போல இருக்கிறதே என்று எண்ணிய சங்கர் ஒரு முறை அனைவரையும் பார்த்தான். குருவும் சிஷ்யனும் அதோ; விஞ்ஞானிகள், கதிர்வேலனார், அவர் மனைவி.... ஆ, மௌனியைத்தான் காணோம்!

     “யாரும் மௌனியைப்பாத்தீங்களா?” என்று குரலெழுப்பினான். அனைவரும் நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இல்லையே! நான் கடைசியாக அந்த ஓடையை தாண்டும் போது பார்த்தேன். இல்லை, நான் அப்புறமும் பார்த்தேனே? அந்த சின்ன மேடு ஏற கதிர்வேலனாருக்கு கை கொடுத்தானே. வள வள என்று பேச்சு ஆரம்பித்தது.

        அதற்குள் மஞ்சுவும் சங்கரும் வந்த வழியே போக ஆரம்பித்தனர். நெடு தூரம் போக வேண்டி இருக்கவில்லை. எல்லோரும் வயலின் அழகை ரசித்த இடத்தில் மௌனி மரத்தடியில் வெறிக்க பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். "ஏம்பா, என்ன ஆச்சு உனக்கு?” வழக்கம் போல் பதில் இல்லை. ஆனால் இப்போது கவனியாமலே அல்லவா இருக்கிறான்? சங்கர் உடம்பை பிடித்து உலுக்க அப்போதும் ஒரு அசைவும் இல்லை.

      “கடடோனியா" என்று ஒரு குரல் கேட்டது. சங்கர் திரும்பி பார்க்க குமரன் நின்று கொண்டிருந்தார். “அசைவே காணோம் பாத்தீங்களா? நான் ஏற்கெனவே இவன் சைகியாட்ரி கேஸ் அப்படிதான் நினச்சேன். சரியாப்போச்சு.”

      பேச்சுக்குரல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேரவே என்ன செய்வது என்று விவாதித்தார்கள். எல்லாருக்குமே அவனை அப்படியே விட்டு விட்டு போக விருப்பமில்லை, வனிதாவைத்தவிர. "நாம கேட்டா வந்தாரு? எப்படி வந்தாரோ அப்படியே போகட்டுமே?”
கதிர்வேலனார் மஞ்சு பக்கம் திரும்பினார். "நீதாம்மா ஏதேனும் வழி சொல்லனும்."
"ஐயா! இந்த பக்கத்தில மலை கிராமம் ஒண்ணு இருக்கு. எப்பவாச்சும் யாரேனும் இந்த இடத்துக்கு வருவாங்க. அவங்களை பாத்துக்க சொல்லிட்டு நாம மேலே போகலாம்.”
"எப்பவாச்சும்னா அவங்க வரவரை காத்திருக்கனுமா" என்று வனிதா கேட்கும் போதே யாரோ வரும் சந்தடி கேட்டது.

3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

உள்ளேனய்யா...

திவாண்ணா said...

அட்டெண்டன்ஸ் மார்க்ட்! :-))

Kavinaya said...

வைத்தீஸ்வரன் கோவில் நடைப் பயணம் நினைவுக்கு வருது :)