Friday, February 27, 2009

தேடல்-10

யாரோ உலுக்கவே தூக்கம் கலைந்தது சங்கருக்கு. உஷ் என்று எச்சரிக்கை செய்தார் குமரன்.
இன்னும் முழுதும் விடியவில்லை.
"என்ன என்ன விஷயம்?”
கண்களை கசக்கியபடி சங்கர் கேட்க "மெதுவா பேசுங்க. வெளியே ஆளுங்க இருக்காங்க. இப்ப நாம தப்பிக்க வழி பாக்கணும். அந்த ஓட்டை வழியா வெளியே பாருங்க" என்றார் குமரன்.
வெளியே பார்த்தபோது அங்கே கூட்டமாக காட்டுவாசிகள் நெருப்பை சுற்றி உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.

"எல்லாரும் ஒரே பக்கமாக இருக்காங்க. நாம எதிர்பக்கமா தப்பிவிடலாம்.”
“தப்பி என்ன செய்வது?”
"அதை பத்தி அப்புறமா யோசிக்கலாம். இப்ப முதல்ல நாம தப்பிக்கணும்.”
"மத்தவங்க?”
"அவங்க பக்கத்து குடிசைலதான் இருக்காங்க.” குமரன் கையைக்காட்ட அங்கே ஓலைகள் கொஞ்சம் பிரிக்கப்பட்டு இருந்தன. கழி ஒன்றை வலுக்கட்டாயமாக நகர்த்தி வழி செய்து இருந்தது தெரிந்தது.
"பார்க்கலாமா?”

சங்கருக்கு அதற்கு மேல் சொல்ல வேண்டி இருக்கவில்லை. சுறுசுறுப்பாக ஓட்டை வழியா ஊர்ந்து வெளியே போனான். மூன்று அடியிலேயே அடுத்த குடிசை இருப்பது தெரிந்தது. "வனிதா! வனிதா!” என்று தாழ்ந்த குரலில் குமரன் கூப்பிட ஒரு நிமிஷம் என்று பதில் வந்தது. சற்றைக்கெல்லாம் ஓலைகள் சில பிரிக்கப்பட்டு வனிதாவின் முகம் எட்டிப்பார்த்தது.
"தப்பிப்போயிடலாமா?”
"உள்ளே வாங்க.”

இருவரும் சீக்கிரமே அடுத்த குடிசைக்குள் புகுந்தார்கள்.
குமரன் தப்பிக்கும் திட்டம் பற்றி சொன்னான்.
உற்சாகமே இல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தாள் வனிதா.
என்ன ஆயிற்று இவளுக்கு? நேற்று இவள்தானே தப்பிக்கிறது பத்தி பேசினாள்? அதுவும் யாரும் கடத்தப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வராத போதே!
என்ன நினைக்கிறாய் வனிதா?
"நடக்காது.” என்றாள் வனிதா.
"ஏன்?”
"அவர்கள் நம்மை முழுவதும் சுற்றி இருக்கிறார்கள். காவலுக்கு ஆள் போட்டு இருக்கிறார்கள்.”
"ஒத்தரையும் காணோமே?”
"வெளியே தெரியாது. ஆனால் இருக்கிறார்கள். அப்படி ஒரு வேளை தப்பினாலும் பிடிக்க நினைத்தால் அது அவர்களுக்கு வெகு எளிது.”
"உனக்கு எப்படி தெரியும்?”
"எப்படியா? நேத்து இரவு முயற்சி செய்தேன். அதனால் தெரியும்.”
என்னது!
வியப்பின் எல்லைக்கே போய்விட்டார்கள் குமரனும் சங்கரும்.
"ஆமாம். நீங்கள் எல்லாரும் நன்றாக தூங்கிவிட்டீர்கள். நான் கொஞ்ச நேரம் படுத்ததாக பாவனை செய்து விட்டு வெளியே எட்டிப்பார்த்தேன். வாசலில் ஆள் இருந்தது. நான் இந்தப்பக்கமாக கஷ்டப்பட்டு சத்தம் இல்லாமல் ஓலைகளை பிரித்தேன். (இப்போது தான் எப்படி சுலபமாக வழி செய்ய முடிந்தது என்று குமரனுக்கு புரிந்தது.) அப்புறம் உங்க குடிசை ஓலைகளை கூட பிரிக்க ஆரம்பித்தேன். ஆனால் சத்தம் அதிகமாக கேட்க ஆரம்பித்ததால் விட்டுவிட்டேன். சரி தப்பிக்க வழியை பார்த்துவிட்டு திருப்பி வரலாம் என்று வெளியே போனேன். அதோ அந்த மரங்களை தாண்டியதுமே யாரோ பின்னால் வருவது போல இருந்தது. திரும்பிப்பார்த்தால் காட்டுவாசி ஒருவன் வந்து கொண்டு இருந்தான். நான் மர இருட்டில் ஒதுங்கி நின்றேன். தாண்டிப்போக போகிறான் என்று நினைத்த போது திடும் என திரும்பி என் மார்புக்கு எதிரே ஈட்டியை நீட்டிவிட்டான். அவன் "ஹும்" என்று சத்தம் போட்டபின் எனக்கு இருந்த தைரியம் எல்லாம் போய் விட்டது. மறு பேச்சு இல்லாமல் திரும்பிவந்து படுத்து தூங்கிவிட்டேன்.”

குடிசையில் பார்த்தார்கள். வள்ளியம்மை மட்டுமே தூங்கிக்கொண்டு இருந்தார்கள். "மற்றவர்கள் எங்கே.” கதிர்வேலனாரும் நித்தியும் வேறு இடத்தில் இருக்கவேண்டும்.

தலையை பிய்த்துக்கொண்டார் குமரன். "இப்ப என்ன செய்கிறது.!”
"பேசாம படுத்து தூங்குங்க. விடிந்த பிறகு பார்க்கலாம்.”

தப்பிக்கும் முயற்சியை இப்படி கைவிட நேர்ந்ததை நொந்துகொண்டு இருவரும் படுக்கப் போனார்கள்.

2 comments:

Kavinaya said...

ஹ்ம்... அப்புறம்? சீக்கிரம் சொல்லுங்க!

தி. ரா. ச.(T.R.C.) said...

ஹ்ம்... அப்புறம்