Monday, February 16, 2009

தேடல் -1

          அப்பனே முருகா, காப்பாத்துப்பா என்றபடி பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள் அந்த தம்பதியினர். கண்களில் பயண அலுப்பு. ஆனாலும் ¨கோவில் எங்கப்பா இருக்கு?¨ என்று பக்கத்து டீக்கடையில் விசாரித்துகொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். தம்பதியினர் குளத்தில் கைகால் சுத்தம் செய்து கொண்டு இளைப்பாற சிறிது தண்ணீரும் குடித்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.

       அந்த கேள்வி அனாவசியம்தான். அந்த மலையடிவார கிராமமே சின்னது. அங்கே கோவில், குளம், சத்திரம் தவிர இரண்டொரு வீதிகள் மட்டுமே. ஒரு நாளைக்கு ஒரு பஸ் அந்தப்பக்கம் வர வேண்டும் என்றாலும் சாலை கெட்டுப்போனால் அரிதாகவே அதை பார்க்கலாம். இன்றைக்கு ஏதோ வந்து இருக்கிறது. இதோ வரேன் வரேன் என்று பயமுறுத்தும் மழை வந்து விட்டால் அனேகமாக இன்னும் ஒருவாரம் வராது.

     சத்திரத்தின் வாசலில் இருவர் தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தனர். “புலிக்குகையை பார்த்தா...”

      "ஐய்யா, எவ்வளவு நேரமா நிக்கிறது? கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்க" என்று இடை மறித்தாள் அந்த பால்காரி. "ஆமா நீ எத்தினி வீட்டுக்கு பால் ஊத்தனும்?” என்று கேட்டப்படியே உள்ளே போனார் சத்திரக்காரர். பாலை பாத்திரத்தில் வாங்கியபடியே "இன்னும் ஒரு லிட்டர் கொடு. பஸ்ஸில அதிசயமா சில பேர் வந்து எறங்கினத பாத்தேன். இந்த எடம் தவிர வேற எங்க போவாங்க" என்றார். ¨ஆமா, இந்த குக்கிராமத்துல பெரிய ஓட்டல் இருக்கே அங்கதான் போவாங்க¨ என்று சிரித்தபடி பாலை ஊற்றிவிட்டு கிளம்பினாள் பால்காரி. சத்திரக்காரர் எதிரில் இருந்த வாலிபனைப் பார்த்து "இதோ நீங்க எதிர்பார்த்த ஆளு வந்துட்டாரு. பேசிக்குங்க" என்றபடி உள்ளே போனார்.

      பேசிக்கொண்டு இருந்த வாட்டசாட்டமான வாலிபன் தெருவைப் பார்த்தான். கிராம சூழ்நிலைக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் ஒரு வெள்ளைக்கார வாலிபன் வந்து கொண்டிருந்தான். அணுகியதும் ¨நான் சங்கர்!¨ என்று கையை நீட்ட, வியப்புடன் பார்த்தான் அவன். "நான் ராபர்ட். சூசன் சுகமா? உங்களை எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் அல்ல" என்றான். இருவரும் சத்திர திண்ணையில் அமர்ந்தனர். ராபர்ட் இயல்பாக உட்கார்ந்ததைப் பார்த்தால் இந்தியாவுக்கு ரொம்பவே பழகியவன் என தெரிந்தது. என்ன விஷயம் என்று ராபர்ட் வினவ அவர்கள் பேச ஆரம்பித்தனர்.

      சத்திரக்காரரின் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. கோவிலில் தரிசனம் முடித்த அந்த தம்பதியினர் சத்திரக்காரரை பார்த்து இளைப்பாற இடம் கிடைக்குமா என்று வினவினார்கள். "தனியா ரூம்பு எதுவும் இல்ல. கூடத்துலதான் தங்க படுக்க எல்லாமே" என்று பதில் வந்தது. தயங்கி நின்ற கணவனைப்பார்த்த அந்த அம்மாள் "வேற வழி? காரோ பஞ்சர் ஆயிருச்சு. ஏதோ பஸ்ஸு கிடைக்க அந்த முருகன் வழி பண்ணான். இங்கேயே தங்கலாம், டிரைவர் சரி பண்ணி கொண்டு வருவானில்லே" என்றாள். "ம்..பார்க்கலாம். இந்த ரோடு இவ்வளோ மோசமாயிருக்கும்னு தெரியாது.” என்றபடி உள்ளே சென்றனர்.

        அலுப்பில் தூங்கிய அந்த அம்மாள் திடீரென்று எழுந்தாள். உடம்பு முழுதும் வேர்த்துக்கொட்டி இருந்தது. முருகா முருகா என்று அரற்ற ஆரம்பித்துவிட்டாள். பக்கதில் கண் அசந்து இருந்த கதிர்வேலர் "என்ன ஆச்சுமா? என்ன ஆச்சு?வள்ளி...என்ன ஆச்சு” என்று பதறினார். "இவ்வளொ நாள் பட்ட கஷ்டத்துக்கு தீர்வு கிடைச்சிருச்சுங்க. முருகன் கனவுல வந்து புலிக்குகைக்கு போ, உனக்கு வழி பொறக்கும்ன்னு சொன்னாரு. அது இங்கதான் எங்கியோ இருக்காம்.”

      புலிக்குகை எங்க இருக்கு என்று கேட்டவரை ஏற இறங்க பார்த்தார் சத்திரக்காரர். "இதென்ன இன்னிக்கு? இதே கேள்வி கேக்கிற இரண்டாவது நபர் நீங்க! அது பத்தி காதுல விழுந்திருக்கு, ஆனா எங்க இருக்குன்னு எல்லாம் தெரியாது" என்றார் அவர்.
" யாரது முதல் நபர்?”
“அதோ திண்ணைல பேசறாங்க பாருங்க ரெண்டு மண்ணேரமா. அதுல வெள்ளக்காரர் இல்லாத ஒத்தர்.”
"வெள்ளக்காரர் எப்படி இங்க...”
"அவர் நாலு வருஷமாவே இங்க இருக்காரு. அவர் தர பைசால தான் சத்தரம் ஓடுது. ஏதோ ஆராய்ச்சி பண்றாரு. மூலிகையால தங்கம் பண்ணப்போறாராம்" என்று சிரித்தார். "இந்தாங்க டீ. ராத்திரிக்கு சாப்பாடு வேணுமில்ல?"
“...முயற்சி பண்ணி பாக்கலாம். நிச்சயமா ஒண்ணும் சொல்ல முடியாது...” என்று பேசிக்கொண்டு இருந்தவர்களை இடை மறித்தார் கதிர்வேலன். "ஐயா! புலிக்குகை பத்தி விசாரிச்சது யாரு?”

         சங்கர் அவரை வியப்புடன் பார்த்தான்.
“ஏன்?"
"அங்க போகனும்"
பேசிக்கொண்டு இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
ராபர்ட் சொன்னான் "அப்படித்தான் இவரும் கேக்கிறாரு. கோவில்லேயே தங்கி இருக்கிற சாமியாரும் அவரோட சிஷ்யனும் கேக்கிறாங்க. எனக்குத்தான் பதில் தெரியலே. பதில் தெரிஞ்ச ஒத்தரை வரச்சொல்லி இருக்கேன். இப்ப கோவில் போயிட்டு சாப்பிட்டு தூங்குங்க. காலைல பாப்போம்”

8 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆரம்பமே ஒரு திரில்லர் மாதிரி இருக்கு :-).

ஷைலஜா said...

காபியோ மாத்திரையோ தேவையின்றி விறுவிறுன்னு போறதே கதை! அப்றோம் என்னாச்சுன்னு படிக்க ஆவலுடன்
ஷைலஜா

திவாண்ணா said...

@ மௌலி //திரில்லர் மாதிரி இருக்கு//
ஹிஹி!
@ஷைலஜா
அக்கா நன்னி. தலைவலி இல்லாட்டா கூட காப்பி எடுத்துக்கலாம்.! ;-)

Kavinaya said...

//ஆரம்பமே ஒரு திரில்லர் மாதிரி இருக்கு :-)//

ரிப்பீட்டேய்..! :)

குமரன் (Kumaran) said...

அடுத்த பகுதி எப்போ? :-)

Vijay said...

அருமையாக உள்ளது - தொடருங்கள் . விஜய்

திவாண்ணா said...

கவி, விஜய்,
நன்னி!
@ குமரன். :-))
இன்னும் பத்து நிமிஷத்திலே!

இராஜராஜேஸ்வரி said...

கதையும் காரணமும் அருமை ..!