Tuesday, May 10, 2016

குழந்தைக்கதைகள் - 3

ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துதாம். அது குட்ட்ட்டி குருவியாம். அது இப்படீஈஈஈ போச்சாம்.
எங்க போச்சு?
சாப்ட ஏதாவது கிடைக்குமான்னு தேடிண்டு போச்சாம்.
உம்!
ரொம்ப தூரம் பறந்து களைச்சுப்போய் ஒரு மரத்துல உக்காந்துதாம். எதிர்க்க ஒரு படம் வரையரவர் இருந்தாராம். அவர் மலைக்கு முன்னால் நின்னுண்டு மலையையும் காட்டையும் படமா வரஞ்சுண்டு இருந்தாராம். குருவி இத ஆச்சர்யமா பாத்துதாம். என்னடா இது, அவர் முன்னால பெரிசா வெள்ளையா துணி இருக்கு. அதுல அவர் ஏதோ இப்படி அப்படி செஞ்சா கலர் கலரா கோடெல்லாம் விழறதுன்னு ஆச்சரியப்பட்டுதாம்.
அது பாத்துண்டே இருக்கறப்ப அவர் படம் வரையறதை நிறுத்திட்டு டீ குடிக்கப்போனாராம்.
அங்க டீக்கட இருந்துதா?
இல்ல.
பின்ன?
ப்ளாஸ்க்ல டீ கொண்டு வந்து இருந்தார். அத குடிக்கப்போனார்.
செரி.
அவர் டீக்குடிக்கறப்ப இந்த குருவி கிட்ட போய் பாக்கலாமேன்னு கிட்ட போச்சாம். அங்க நெறையா கிண்ணம் வெச்சு இருந்துதாம். ஒவ்வொண்ணுத்துலேயும் கலர் கலரா தண்ணி மாதிரி இருந்துதாம். என்ன என்ன கலர் இருந்தது?
நீலம் ம்ம்ம்ம் ப்ரௌன், செவப்பு, பிங்க் ம்ம்ம் அப்பறம் ப்ரௌன்….. இல்ல இது வேற ப்ரௌன்! அப்பறம் மஞ்சள் எல்லாம் இருந்துதாம்.
ரைட்! இருந்துதா? குருவி கிட்ட பாக்கறதுக்கு குனிஞ்சு பாத்துதாம். அதோட மூக்கு ஒரு கிண்ணத்துக்குள்ள போயிடுத்தாம். அந்த கிண்னத்துல மஞ்ச கலர் இருந்துதா? மூக்கு மஞ்சளா போயிடுத்து!
அப்பறம் அது குனிஞ்சதால கலர் கிண்ணமெல்லாம் வெச்சிருந்த ஸ்டூல் தொப்புன்னு கவுந்துடுத்தாம். படம் போட்டவர் என்னடாது சத்தம்ன்னு ஓடி வந்தாராம். கலர் எல்லாம் குருவி மேலே கொட்டிடுத்தாம். குருவி அலறி பொடச்சுண்டு அங்கேந்து பறந்து போயிடுத்தாம்.


பயந்து போன குருவி தன்னோட மரத்துக்கு போச்சாம். அங்க இருந்த மத்த குருவி எல்லாம் நீ யார்டா ந்னு கேட்டுதாம்.
என்னடா இப்படி கேக்கறீங்க? நாந்தான் குட்டி குருவின்னு சொல்லித்தாம்.
போப்போ! குட்டிக்குருவி இப்படி எல்லாம் இருக்காது. ஏன் நாங்க யாருமே இப்படி கலர் கலரா இருக்க மாட்டோம். மரியாதையா போயிடு ந்னு வெரட்டிடுத்தாம்.
என்னடா செய்யறதுன்னு யோசிச்ச குருவி ஆந்தைகிட்டே போய் யோசனை கேக்கலாம்ன்னு பறந்து போச்சாம். கதய கேட்ட ஆந்த “ம்ம்ம்ம் ரொம்ப சிக்கல்தான். யோசிச்சு சொல்லறேன். அந்த மரத்துல உக்காந்துண்டு இரு” ன்னு சொல்லித்தாம். குருவியும் அது காட்டின மரத்துல உக்காந்துண்டு அக்கம் பக்கம் பாத்துதாம். அங்க ஒரு கொளம் இருந்துதாம். ஒண்ணும் சாப்பிடவே இல்லையே. கொஞ்சம் தண்ணியாவது குடிக்கலாம்ன்னு கொளத்துக்கு போச்சாம். குனிஞ்சு கொளத்துல தண்ணி குடிக்கறப்ப ..
தொப்புன்னு கொளத்துல விழுந்துடுத்தாம்தானே?
ஆமா. கொளத்துல விழுந்துடுத்து. சுதாரிச்சு எழுந்து கரைக்கு தத்தி தத்தி போயிடுத்தாம். கரைலேந்து பாத்தா தண்ணி கலர் கலரா ஆயிடுத்து! ஆச்சரியத்தோட பாத்துண்டு இருந்த குருவிகிட்ட ஆந்த வந்து நீ பழயபடி ஆயிட்டே. உன் இடத்துக்கு திரும்பிப்போ ந்னு சொல்லித்து. அப்படியான்னு குருவியும் சந்தோஷமா ஒடம்ப பாத்துதாம். கலர் போய்டுத்து! அப்பறம் அது பறந்து தன்னோட மரத்துக்கு போச்சு. அந்த இருந்த குருவி எல்லாம் “டேய், நீ இல்லாதப்ப ஒரு பறவை வந்து தாந்தான் நீ ந்னு சொல்லி எங்கள ஏமாத்தப்பாத்துதுன்னு சொல்லித்தாம். குருவி இல்லடா நாதான் அதுன்னு சொல்லித்து.
மத்த குருவி எல்லாம் நம்பலை. அப்பறம் குருவி தன்னோட ரெக்கைல இன்னும் ஒட்டிண்டு இருந்த கலரை எல்லாம் காட்டித்தாம். அப்பறம்தான் அதுங்க நம்பித்து. எப்படி இப்படி ஆச்சுன்னு கேட்டுதாம். குருவி சொன்ன கதையை கேட்டு ரொம்ப ஆச்சரியப்பட்டுடுத்தாம்.

கொர்ர்ர்ர் கொர்ர்ர்...

No comments: