Monday, July 14, 2014

சலூன் கதைகள் -1




வாங்க ஐயா! கணேஷ் ஐயா உங்கள பத்தி சொன்னாரு... குடுமி வைக்கணும் அவ்ளோதானே? செஞ்சிரலாம். உக்காருங்க. ம்ம்ம்ம் ஐய இதென்ன? வேல தெரியாம  வெச்சு இருக்காங்க.... அது சரி,  நீங்க என்ன செய்வீங்க? இப்பல்லாம் யாரு வெச்சுகிறாங்க? ஐயருங்களே வெச்சுக்கிறதில்ல. தமிழருங்க பத்தி கேக்கணுமா. யாருக்கும் பழக்கமில்லாம போயிட்டது ... நம்ம ஊரு எதுங்க?
……
ஓ இதேதானா?
…….
 தாத்தா வந்து சேந்த ஊரா? ஓ அந்த நேரமெல்லாம் நா இங்க வரல.
ஏனூரு சேத்தியாத்தோப்பு பக்கம். அப்படியே வீராணம் ஏரிகரையோரமா போனீங்கன்னா மூணு மைல். அப்பல்லாம் நடந்தே போகனும், இப்பத்தான் ஊருக்கு ஊர் க்ராமத்துக்கு க்ராமம் பஸ்ஸு விட்டிருக்காங்களே. எங்கப்பா நாட்டு வைத்தியம் பாப்பாரு. பத்து க்ராமத்துக்கு அவருதான் வைத்தியரு.  இதெல்லாம் உனக்கு வேண்டாண்டான்னுதான் இந்த வேலைல இழுத்து விட்டாரு. கர்மா சேருண்டாம்பாரு. இருந்தாலும் எனக்கு பச்சிலை வைத்தியம் எல்லாம் தெரியுங்க. இப்படித்தான் பாருங்க பண்ரொட்டிக்கு மேஜிக் செஞ்சுகாட்ட போனேன்

என்ன! ஆஆமாங்க. மேஜிக் நல்லா செய்வேன். இந்த ஸ்கூலுங்களுக்கு எல்லாம் போவேன். அப்பவே நூறு எரணூறுன்னு கொடுப்பாங்க. இப்பத்தான் உடம்பு முடியல. காலு பின்னுது. அத விட பாருங்க இந்த மூச்சு எறப்பு! சமயத்துல போயிடப்போறோம்ன்னு தோணும். எப்படியோ இழுத்து பிடிச்சுகிட்டு இருக்கேன்

அய்ய்ய்யய்யோ! என்னாத்த வேல செஞ்சிருக்காங்க! என்கிட்ட வேல பாத்த ஆளு இப்பிடி செய்வானா? ஆமாங்க! தெருவில கட வெச்சிருந்தப்ப நாலு ஆளு வேலை செய்யும்! நாலு பெரிய கண்ணாடி, இந்தா மாதிரி நாலு கண்ணாடி…. இந்த ஏரியாலியே பெரிய கட என்னுதுதான். அதெல்லாம் ஒரு காலம்…..

என்ன சொன்னேன்? ஆங்! மேஜிக் காட்ட போனேன். பண்ரொட்டி பக்கத்துல க்ராமம். ஒரு 200 புள்ளைங்க இருந்துச்சு. அல்லாம் முடிச்சுட்டு திரும்பி வரேன். எரநூறு ரூவா கொடுத்தாங்க. பஸ்ஸுல ஏறினதுமே அவன பாத்துட்டேன். வயசானவந்தானே புடிங்கிக்கலாம்ன்னு நினைச்சான் போலருக்கு. நல்ல தண்ணி வேற. சாக்கிரதையா பாத்துகிட்டு இருந்தேன். பஸ் ஸ்டாண்ட் வரப்ப கூட்டமே இல்ல. நா பின் பக்கமா எறங்கறப்ப அவன் முன் பக்கமா எறங்கறான். சுதாரிச்சுட்டேன். பாக்கெட்லெந்து ஒரு பொடிய எடுத்து காத்து தெச பாத்து ஊதிவிட்டுட்டு கம்ன்னு வந்துட்டேன்!
என்ன ஆச்சா? உடம்பு முழுக்க அரிப்பு ஆரம்பிச்சுடும். அப்புறம் அவன் ஏன் நம்ம பத்தி யோசிக்கப்போறான்!

அதுவா! …….. ந்னு… க்ராமத்துல வேலில எல்லாம் பூக்கும்! அத காய வெச்சு பொடி பண்ணி வெச்சுக்க வேண்டியதுதான்! மூணு நாளுக்கு அரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான்.

மாத்தா? அது ரொம்ப சுலபங்க! மஞ்ச பொடிய கரச்சு மேல ஊத்திக்கணும். அப்படி கொஞ்சம் எறங்கி உக்காருங்க! ஷேவிங் நீங்களே பண்ணிப்பீங்களா?  தப்பில்ல…
இப்ப ஒண்ணும் முடிலிங்க. எறைக்குது. இருந்தாலும் ஸ்கூல் தெறக்கரப்ப போய் கேப்பேன். இப்பல்லாம் உள்ளூரோட நிறுத்திக்கிறது. இத பாருங்க சர்டிபிகேட் எல்லாம்…. இது கலெட்டரு கொடுத்தது…. இது போலீஸு சூப்பரெண்டு. இது புது வாழ்வு….
ஆயிடுச்சுங்க. அடுத்தவாட்டி வரதுன்னா முன்னயே போன் பண்ணுங்க. உங்கள ஒடனே பாத்து அனுப்ச்சிடுவேன். இந்த எறப்பு மருந்து எதாச்சுனா…… சரிங்க, ஆவட்டும்.போய் வாங்க.


3 comments:

வல்லிசிம்ஹன் said...

அருமை. வல்லவரான முடிதிருத்துபவர். நன்றாக இருந்தது தம்பி வாசுதேவன். இவர் கூட சலூன் போனால் கதைகள் கொண்டு வருவார். நல்லா வேணும்னு நினைச்சுப்பேன். நாம் பேசினால் கேட்க நேரம் இருக்காது. அவன் கத்தியை வச்சுண்டுனா பேசறான்.மருந்து கொடுத்தீர்களா.:)))

geethasmbsvm6 said...

மருந்து கொடுத்து குணமாயிடுச்சுனு சொல்றாரே! என்ன மருந்து கொடுத்தீங்க? எனக்கும் அப்படி ஏதேனும் கொடுக்கக் கூடாதோ? :(

திவாண்ணா said...

mkum!